பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ரோஜா இதழ்கள்

“மாடிலேந்து காபிக் கப், ட்ரேயெல்லாம் எடுத்துவரலே! போயிக் கொண்டுவந்து கழுவி வை!”

“அட, மன்னியா? எப்ப வந்தே நீ? அந்தப் பொண்ணு யாரு?...” என்று கேட்கும் லோகநாயகியை நிமிர்ந்து நோக்கக் கூசுபவள்போல் நிற்கிறாள் மைத்ரேயி. வாட்டசாட்டமான உருவம். புசுபுசுவென்று தொங்கும் கன்னம். குரலில் ஒரு குளுமை இருக்கிறது.

“நான்தான் பாத்துட்டு ரொம்ப நாளாச்சேன்னு கிளம்பி வந்தேன்...” படி ஏறி நடந்து கொண்டே மதுரம் விவரம் கூறுகிறாள்.

“நான் உனக்குச் சொல்லி அனுப்பணும்னா, அட்ரஸா கிட்ரஸா ஒண்ணுந்தெரியாது. அன்னிக்கு ஒருநா உன்பெரிய பிள்ளை வந்தான். அவங்கிட்ட அப்பவே இங்கே ஆளில்ல. உங்கம்மாக்கு வரமுடியாட்ட யாரையானும் அனுப்பிவையின்னுகூடச் சொல்லி அனுப்பிச்சேன். வந்து சொல்லலியா அவன்?”

“யாரு, சீனுவா? சொல்லலியே தடியன்? சொன்னா வராம இருப்பேனா?”

“திண்டாடிப் போச்சு, போ. நான் வேற புனாவுக்குப் போயிட்டேன். சேதுவுக்கு வயிற்றுக் கடுப்பு, நீ வருவே வருவேன்னு பார்த்துக் கடைசில ஒரு அம்மாளைக் கொண்டுவந்து வச்சோம். எவர்சில்வர் பாத்திரம் ஒரு நானூறு ரூபாய் பாத்திரம் காணலே. எங்கியோ மாம்பலத்திலே இருக்கேன்னு சொன்னான். எங்கேயானும் வேலை செய்யறியா என்ன?”

“மாம்பலமா? பட்ணம் வந்தா எனக்கு எப்படி கட்டுப் படியாகும் லோகாம்மா? ரோக்கு ரோக்கு வீட்டு வாடகை கொடுத்துச்சாப்பிடணுமே? மாம்பாக்கம்னு திருக்கழுக்குன்றம் பக்கத்திலே கிராமம். ஓட்டலை மூடிட்டு அவர் அங்க வந்திருக்கார்னு தெரிஞ்சு நான் எல்லாத்தையும் இழுத்துண்டு வந்தேன். ஒண்ணும் சுகமில்ல. உங்ககிட்டச் சொல்லிக்கறதுக்கென்ன? நாமட்டுமானா பேசாம இங்கே இருந்துடுவேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/94&oldid=1101947" இலிருந்து மீள்விக்கப்பட்டது