பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

லியோ டால்ஸ்டாயின்

ருஷ்யாவில் ஜார் என்ற கொடுங்கோலன் ஆட்சியின் போது, மன்னர்களுக்கு வேண்டியவர்களானாலும் சரி, செல்வாக்கும் சொல்வாக்கும் படைத்தவர்களனாலும் சரி, அவர்களுக்குக் கவுண்ட் (COUNT) என்ற பிரபு பட்டம் வழங்கப்படுவது அன்று வழக்கமாக இருந்தது. டால்ஸ்டாயின் முன்னோர்கள் ஜார் மன்னன் பரம்பரையின் அன்பைப் பெற்றிருந்தார்கள். அதனால், டால்ஸ்டாயின் முன்னோரான பீட்டர் டால்ஸ்டாய் என்பவருக்கு, மகாபீட்டர் என்ற ருஷ்ய மன்னர் அந்தப் பிரபு பட்டத்தை வழங்கினார்.

மகாபீட்டர் என்ற மன்னன் மாண்டதும் மகாகாதரைன் என்ற அரசி ருஷ்ய ஆட்சிக்கு வந்தாள். அவளும் மகா பீட்டரைப் போலவே, டால்ஸ்டாய் முன்னோர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாள். அவளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாவது பீட்டர் மன்னன், பீட்டர் டால்ஸ்டாயை நாடு கடத்தி விட்டான். அது மட்டுமன்று, ‘பிரபு’ என்ற பட்டத்தையும் ஆணவத்தால் பறித்துக் கொண்டான். பாவம், நாடு கடத்தப்பட்ட அந்த அதிர்ச்சியால் பீட்டர் டால்ஸ்டாய் இறந்தார்.

மகாராணி எலிசபெத் பிறகு ருஷ்ய ராணியானாள். அவள், ஜாக் பரம்பரையால் பறிக்கப்பட்டு விட்ட பிரபு என்ற பட்டத்தை மீண்டும் டால்ஸ்டாயின் முன்னோருக்கு வழங்கினாள். அத்துடன் ஆட்சியினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தையும், சொத்துக்களையும் திருப்பிக் கொடுத்தாள்.

மன்னர் பரம்பரையான மகாராணியின் கருணையால் மீண்டும் வழங்கப்பட்ட நிலத்தையும், சொத்தையும் டால்ஸ்டாயின் முன்னோர் விற்று விழுங்கி விட்டு, ஒருவேளை உணவுக்கே வக்கற்று வழியற்று, வறுமை நோயால் வருந்தினார்கள்.