பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

15

“நாங்கள் நால்வரும் நாற்காலிகளின் அடியில் பதுங்கிக் கொள்வோம். எங்களைச் சுற்றி நாலா பக்கங்களிலும் பெட்டி, படுக்கைகளை அடுக்கி சந்துகளை மறைத்துக் கொள்வோம். துணிகளால் இடுக்குகளை மூடி மறைத்துவிடுவோம். இருட்டில் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு அமர்வோம். அந்த நேரத்தில் எங்களுக்கு அதிகமான அன்பும், இரக்கமும் மனத்தில் உண்டானதை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. இந்த ஆட்டம் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார், டால்ஸ்டாய்.

நிக்கோலஸ் தனது தம்பிகளுக்கு இது போன்ற அதிசயமான, புத்தி நுட்பமான செய்திகளை அடிக்கடி கூறுவார்; அவர் கூறுவது எல்லாமே உண்மை தான் என்ற நம்பிக்கை தம்பிகளுக்குத் தோன்றிவிடும்.

டால்ஸ்டாய் தனது தமையன் கூறும் மற்றொரு செய்தியை குறிப்பிடுகிறார். அதில்;

“நீண்ட தூரத்தில் ‘பெண்பெரன்’ என்ற ஒரு மலைச் சிகரம் உள்ளது. அவர் கூறும் சில பணிகளை நாங்கள் தவறாமல் சரியாகச் செய்துவிட்டால், அந்த மலை உச்சிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கைக் காட்சிகளைக் காட்டுவதாகக் கூறுவார். அவ்வாறு அவர் கூறுவதில் மூன்று நிபந்தனைகள் இருக்கும். அவற்றுள்

ஒன்று இது:

“நாங்கள் ஒரு மூலையில் நின்று கொள்ள வேண்டும். வெள்ளைக் கரடி என்று ஒரு மிருகம் உள்ளதல்லவா? நெஞ்சிலே அதை நினைக்கவே கூடாது என்பார். நாங்கள் மூலையில் நின்று கொண்டு வெள்ளைக் கரடியை நினைக்காமல் இருக்க முடியுமா? முயற்சிப்போம் ஆனால், என்ன முயன்றாலும், வெள்ளைக்கரடி எங்களுடைய மனத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.”