பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35

“மரணதண்டனை பெற்ற அந்தக் கைதியின் தலை உடலிலே இருந்து தெறிந்து தனியாக வெளியே வந்து கூடை ஒன்றில் விழுந்ததைக் கண்டேன்! கில்லட் வெட்டரிவாளிலிருந்து ரத்தம் ஒழுகுகிறது; தலை சிதறி விழுந்த இடம் முழுவதும் ரத்தப் பெருக்கு முண்டத்தின் துள்ளல் ரத்தம் தேங்கி ஓடுகின்ற காட்சி! நம் நாகரிகத்தினால் நிர்மாணிக்கப் பெற்ற நிறுவனங்கள், சிந்தனைசக்தி, குறிக்கோள்கள் யாவும் ஒன்று சேர்ந்து வாதாடினாலும் இந்தக் கோரமான செயலை நியாயமானது என்று ஏற்க முடியாது. பண்டையக் காலத்தில் இக் கொடூரம் நீதியானது என்று வாதாடி முடிவெடுத்திருந்தாலும், எந்த நிலையிலும் இந்த மரணக்கொடுமையை ஒரு மனித குலத் தீமையாகவே நினைக்கிறேன்.” என்று டால்ஸ்டாய் குறிப்பிட்டார்.

ஒரு மனிதன் அருவருப்பான, இரக்கமற்ற செயலோடு தலைவேறு உடல் வேறாகக் கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்டு விட்ட பிறகு, அழகு ததும்பும் அற்புத பாரீஸ் நகரம் ஓர் அருவருப்பான நகரமாகே அவருக்குப் புலப்பட்டது. அதனால் அப்போதே சுவிட்சர்லாந்து நாட்டுக்கு ஓடி விட்டார்!

ஜெனிவா மலை மேலே உள்ள இயற்கை எழில் தவழ, உருவாக்கப்பட்டிருந்த கிளாரன்ஸ் என்ற நகருக்கு வந்து தங்கினார்! அந்த நகர் அழகானது மட்டுமன்று; நகருக்கு நான்கு பக்கங்களிலும் ஓடும் ஆறுகளது அழகும், அருவிகளது சலசலப்பும், மேகத்தையும் பின்தள்ளிக் கொண்டு நிமிர்ந்து நின்ற பனிச்சிகரப் பாறைகள் கரைந்துருகும் பனிச்சிதறல்களது சாரலும் கண்டு டால்ஸ்டாய் மிகமிக வியந்து அங்கேயே சில நாட்கள் தங்கிவிட்டார். அதற்குப் பிறகே சுவில் நாட்டுப் பகுதியின் உள்ளூர்களது காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தார். அங்கே லூசெரன் என்ற ஓர் ஏரிக்கரை உணவு விடுதியிலே அவர் தங்கியிருந்தபோது தான், ஓர் இனிமையாகப் பாடும் பாடகன், அங்கே வந்து சேர்ந்தான்.