பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடிமை முறைகள் அழிய டால்ஸ்டாயின் எழுத்துப்போர்!

சொந்தக் கிராமத்திலே ஒரு விவசாயப் பண்ணையை அமைத்த டால்ஸ்டாய், அத்துறையிலே மிக வெற்றிகரமாக முன்னேறியதுடன், மக்களுக்கும் தனது பண்ணை விவசாய வழிமுறைகளைக் கற்றுக்கொடுத்து, விவசாயப் பெருமக்களுக்கு காலத்துக்கேற்ற வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

இந்த வேளையில் அவருடைய மூத்த அண்ணன் நிக்கோலஸ் நோய்வாய்பட்டு துயரடைந்து கொண்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு எலும்புருக்கி நோய் தாக்கியுள்ளதாக முடிவு செய்து, அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளைத் தந்து கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே நோய் அதிகமாவதைக் கண்ட டாக்டர்கள், நிக்கோலசை சோடேன் என்ற நகரிலே இருக்கும் காசநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யோசனை கூறினார்கள். அதனால், நிக்கோலஸ் அந்நகரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்யப்பட்டார்.

டால்ஸ்டாய், உடன் பிறந்த தங்கையுடன் புறப்பட்டார். தங்கையை முதலில் சோடேன் நகரிலே உள்ள அண்ணனிடம் அனுப்பிவிட்டு, அவர் நேரே ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார்.