பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

லியோ டால்ஸ்டாயின்

அவர்கள் தங்களது பள்ளிப் படிப்பைத் தவறவிட்டு விடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், தங்களது வீட்டு வேலைகள் முடிந்த பின்பு, அது எந்த நேரமாக இருந்தாலும், பள்ளிக்கு வந்து சேர்ந்து விடும் பசுமை எண்ணம் அவர்களிடையே வளர்ந்து வழக்கமாயிற்று.”

இப்படிப்பட்ட பள்ளிப் பழக்க வழக்கங்கள். ஓர் அரசுப் பள்ளியின் உருவாகுமானால், தொடர்ந்து அவ்வொழுக்கங்களைக் கடைபிடிக்கும் கட்டளை இருக்குமானால், பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் ஏன் மகிழ்ச்சியைப் பெற மாட்டார்கள்? இதைக் கல்வி முறைப் பயிற்சியாளர்களும் அதை நடத்தும் அரசுகளும் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும்.

இந்த நேரத்தில், டால்ஸ்டாய் தனது ஓய்வில்லாப் பணிகளில் காரணத்தால் உடல் நலம் குன்றினார். அதனால், இதுவரை இருந்த இடத்தை விட்டு அகன்று வேறோர் இடத்துக்குச் சென்றார்.

இடம் மாறவேண்டும் என்ற நோக்கத்துக்காக அவர் சென்றதைக் கண்ட காவல்துறையினர். அச்சமயத்தில் சந்தேகம் காரணமாக டால்ஸ்டாய் வீட்டைச் சோதனையிட்டார்கள். இந்த போலீசாரின் சோதனையைக் கண்ட அவ்வூர் கிராமமக்கள், அவரவர்கள் பிள்ளைகளை பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள். யார் மேல், யார், எதற்காக, இதுவரை நடந்ததென்ன, என்ற, முழு விவரங்களை ஓர் அரசு சரியாக உணராத காரணத்தால், ஒழுங்காக நடந்து வந்த ஒரு ஒழுக்கமான பள்ளி அமைப்பை அரசாங்கமே சீர் குலைத்து விட்டதை மக்கள் பிறகே எண்ணிப் பார்த்தார்கள்.

சிறுகச் சிறுகக் கட்டபட்ட தேன் கூடு போன்ற ஒரு சீரான பள்ளியை அவசரக்காரர்களது அரசு, சந்தேகத்தின் பெயரால் சிதைத்து விட்டார்களே என்று கூறி அக்கம்பக்கம் உள்ள கல்வியாளர்கள் வருத்தமடைந்தார்கள்.