பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

லியோ டால்ஸ்டாயின்

ஜார் மன்னனது அரசும், அதன் கல்வித் துறையும், பொது மக்களும், கல்வியாளர்களது தீர்க்க தரிசனமும் டால்ஸ்டாயின் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தந்தும்கூட, அதே ஜார் மன்னது அரசு தனது அறிக்கையின் ஓர் முனையில், “டால்ஸ்டாயின் கருத்துக்கள் எல்லாவற்றையும் கல்வித்துறை ஏற்கவில்லை என்றும், விரும்பத்தகாத திட்டங்களை அவர் கைவிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும், விருந்திலே நஞ்சு வைப்பது போன்று சேர்த்துக் கொண்டது.

ருஷ்ய அரசுக்கு ஏற்பட்டுவிட்ட உள்ளூர அச்சம் காரணமாக, எப்படியாவது டால்ஸ்டாயின் கல்வித் தத்துவப் பள்ளிகளை மூடிவிடவேண்டும் என்ற எண்ணமே அந்த அரசுக்கு இருந்தது. காரணம், பொதுவுடைமைக் கொள்கை ருஷ்யாவில் பரவி விடுமோ என்ற பயத்துக்கு அருமையான ஓர் அறிவியல் கல்வித்திட்டத்தை ஜார் அரசு பலிகொண்டு விட்டது.

ஆட்சியை அதிர வைக்கும் இந்த திட்டத்தை டால்ஸ்டாய் மாதிரிப் பள்ளிகளிலே போதித்த ஆசிரியர்களை கல்வித் துறையினர் பயமுறுத்தி மிரட்டி வெளியேற்றினார்கள். அந்தப் பள்ளிகளுக்கு யாரும் அவரவர் பிள்ளைகளைக் கல்வி கற்றிட அனுப்பக் கூடாது என்று கல்வித்துறையினர் தடை செய்தார்கள்.

கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இது கண்டு பயந்தார்கள்; படாதபாடு பட்டார்கள்; பெற்றோர்களும் அச்சுறுத்தப்பட்டார்கள்; மாணவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்! இந்த நிலையில் டால்ஸ்டாயின் கல்வித் திட்டப் பள்ளிகள் நடக்குமா? எனவே, டால்ஸ்டாய் தனது கல்வித் திட்டத்தின் வெற்றியை இழந்தார் எதிர்காலக் கல்வித்துறை தனது அருமையான நாட்டுச் சேவையைக் கைவிட்டது!