நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
55
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலைக்கேற்றவாறு, டால்ஸ்டாய் தனது இடைவிடாப் பணிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இலக்கிய சேவைகளை எல்லாம் அகற்றி வைத்துவிட்டு, அவரே நேரடியாகக் கிராமம் கிராமமாகச் சென்று ஆங்காங்கே உள்ள உண்மைகளை உணர்ந்தார்.
எந்தெந்த இடத்தில் என்னென்ன பார்த்தாரோ அவற்றை எல்லாம் கொஞ்சமும் கூட்டாமல் குறைக்காமல் உள்ளதை உள்ளவாறே ‘மாஸ்கோ கெஜட்’ என்ற பத்திரிகைக்கு அறிக்கை விடுத்தார். அதன் விளைவைச் சுட்டிக்காட்டி மக்களது ஆதரவைக் கேட்டு பத்திரிகையில் டால்ஸ்டாய் வேண்டுகோள் வெளிவந்தது. அதனைக் கண்ட ருஷ்ய மக்களும் டால்ஸ்டாய் ஆதரவாளர்களும் மிகக் குறுகிய காலத்தில்குள் அளவுக்கும் அதிகமான தானியங்களையும், இரண்டு லட்சம் ரூபிள்களையும் வசூல் செய்து அனுப்பி வைத்தார்கள்.
மக்களும் அவரது எழுத்துலக வாசகர்களும் செய்த உதவியால், பஞ்சத்தால் தாக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய பஞ்ச நிவாரண உதவியை அவரே செய்தார். தனியொரு மனிதனின் இந்தக் கருணையான செயலைக் கண்ட ருஷ்ய மக்கள் ஞானி டால்ஸ்டாயை மிகவும் நேசித்து, ஏழைப் பங்கானர் என்று பேசிப் பாராட்டினார்கள்.
குடியானவர்களின் அடிமைப் பழக்க வழக்கத்தை அகற்றியதால் ருஷியாவில் அமைதி உருவாகவில்லை. ஆனால், அதற்குப்பிறகுதான் புதிய புதிய வரிச் சுமைகளை அரசு அவர்கள் மீது திணித்தது. அவர்களுடைய குறைகளை அரசனோ, அதிகாரிகளோ கவனிக்க மறுத்த நிலை ஏற்பட்டது. இதனால் மக்களிடையேயும், குடியானவர்கள் மத்தியிலும் பெரும் குழப்பம் நிலவியது. நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகமானதால் அதிருப்தியும், ஆத்திரமும் மக்களது உள்ளத்தில் பொங்கி வழிந்தன.