பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

லியோ டால்ஸ்டாயின்

தனியொரு மனிதன் தனது குடும்பத்துடன் வந்து ஏழை எளிய மக்களுக்கு செய்துவரும் பரோபகாரப் பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்துப் பணக்காரர்களில் பலர், அவருடன் ஒத்துழைக்கத் திரண்டனர்.

பஞ்சத்தால் வேதனைப்படுவோர்களுக்கு எப்படியெல்லாம் உதவிசெய்யலாம் என்று அவர் எழுதியக் கட்டுரைகளை; அப்போதுள்ள பத்திரிக்கைகள் தக்க சமயத்தில் வெளியிட்டு உதவின. அதைப் படித்த பிறகே மக்கள் பெருவாரியாகத் தானிய வகைகளையும், பணத்தையும் நலிந்தோருக்குக் கொடுத்து உதவினார்கள்.

பஞ்சத்திலே உள்ள மக்களானாலும் சரி, நடுத்தர வசதி படைத்தவர்களானாலும் சரி, அவரவர் வீடுகளிலே உள்ள உணவுப் பொருட்களைத் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். அப்படிக் காப்பாற்றிய பொருள்களை உணவுப் பொருள்கள் இல்லாதவர்களுக்கு அவரவர் நிலைமை அறிந்து பங்கிட்டுக் கொடுப்பது சிறந்த உதவி என்றார்.

கிராமங்கள் ஒவ்வொன்றிலும் உணவு விடுதி ஒன்றை உருவாக்கி, அதன் மூலமாக எல்லாருக்கும் உணவுகளைத் தயார் செய்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவை பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு டால்ஸ்டாய் கூறிய யோசனைகளாகும்.

தனது புதல்விகள் இருவரும், மருமகனும், கணவர் டால்ஸ்டாய் தலைமையில் பஞ்ச நிவாரண மக்கள் தொண்டு செய்வதைக் கண்ட டால்ஸ்டாய் மனைவியான பேஹர் என்ற சோன்யா, தானும் வலியச் சென்று குடும்பத்துடன் இணைந்து வேலைகளைச் செய்தார். அத்துடன் நில்லாமல், மற்ற மக்களும் பஞ்சநிவாரணப் பணிகளுக்கு ஏற்ற உதவிகளை கருணையோடு செய்ய முன்வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.