டால்ஸ்டாய் ஓர் உண்மையான கிறித்துவர். ஆனால், அவரை ஒரு கிறித்துவர் என்று எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், கிறித்துவ மதத்தில் கலந்துவிட்ட குருட்டு நம்பிக்கைகளையும், தீமைகளையும் ஆஷாட பூதித் தன்மைகளையும் அவர் அடிக்கடி கண்டனம் செய்து கொண்டிருந்ததாலே அவரை ஓர் உண்மையான கிறித்துவராக எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாரும் அவரை வெறுத்து மதத் துரோகி என்றார்கள்.
கிறித்துவர்கள் எனப்படுவோர் எல்லோரும் மத அளவில், பெயரளவில் கிறித்துவர்களாக இருந்தார்களே தவிர, உண்மையில் இயேசுநாதரின் போதனைகளைப் பின்பற்றுபவர்களாக இல்லை என்பதை அவ்வப் பொழுது டால்ஸ்டாய் சுட்டிக் காட்டியபடியே இருந்தார். ஓயாமல் குறை கூறி கொண்டிருந்த அவரது போக்கை அக்காலக் கிறித்துவர்கள் எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள்.
இதனால் ஆத்திரமும், கோபமும், வெறுப்பும் கொண்ட கிறித்துவ மதத் தலைவர்கள் அவரது மதத் துரோகச் செயல்களைக் கட்டுப் படுத்த ஜார் மன்னனுடைய ஆதரவை நாடினார்கள். ருஷ்ய மன்னன் அந்த எதிர்ப்பாளர்களது செயலுக்கும் சொல்லுக்கும் மதிப்புக் கொடுக்காமலே இருந்தார்.