பக்கம்:வசந்த மல்லிகா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

வஸந்தமல்லிகா

என்றாள். மல்லிகா அவள் யாவனென்னு நிமிர்ந்து பார்த்தாள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வண்டிக்கருகில் ஒரு யெளவனப் புருஷன் நின்றதைக் கண்டாள். முதல் நாள் தான் வம்புலாஞ் சோலையிற் கண்ட மனிதன் அவனேயென்று அவளுக்கு ஒரு நினைவுண்டாயிற்று. ஆகையால், அவளும் வெளியிற் போகாமல் வாசற்படிக்குள்ளேயே நின்றாள். அவன் அவ்விரு மடந்தையரையும் கவனிக்கவில்லை.

"அவன் யார் தெரியுமா? தமயந்திபாயின் சிநேகிதன்; அவளைக் கலியாணம் செய்துகொள்ளப் போகிறவன். அவளுக்காக வண்டி வைத்துக்கொண்டு தயாராக நிற்கிறான். அவன் பார்வைக்கு லட்சணமாக இருந்தாலும், என்ன காரணத்தினாலோ அவனிடத்தில் எனக்கு ஒருவித வெறுப்புண்டாகிறது" என்றாள் கிருஷ்ணவேணி. அந்தச் சமயத்தில் தமயந்திபாயி வெளியிற் சென்று, வண்டிக்கருகில் நின்ற பீமராவைக் கண்டு புன்னகை செய்து, "வந்து நிரம்ப நேரமாயிற்றோ?" என்றாள். "இல்லை இல்லை; இப்போதே வந்தேன். ஆனால் அவசரமான காரியம் ஒன்று இருக்கிறது. நான் போக வேண்டும். நீ வண்டியில் உட்கார்ந்துகொள்; வண்டிக்காரன் உன்னுடைய வீட்டுக்கு ஒட்டிக் கொண்டு போவான். நான் இன்று உன்னோடு வர முடியாது” என்றான்.

"உனக்கு எப்போதும் அவசர காரியந்தான் இருக்கட்டும்; என்னோடு வீட்டிற்கு வந்து உடனே போய்விடலாம். கால் நாழிகையாகாது. அதற்குள் தலை போய்விடாது" என்றாள் தமயந்தி.

பீமராவ், "இல்லை இல்லை; மற்ற நாளைப்போலில்லை. இன்று உண்மையில் அவசரமான ஒரு காரியம் இருக்கிறது. வண்டியில் உட்கார்ந்துகொள். நீ நல்ல பெண்ணல்லவா சொன்னபடி கேள்" என்று நயந்து வேண்டி அவளை வண்டியில் உட்கார வைக்க, வண்டி புறப்பட்டது.

"சரி; அப்படியானால் சீக்கிரம் வந்து விட வேண்டும்" என்று தமயந்திபாயி சொல்லிக் கொண்டே மறைந்தாள்.

பீமராவ் உடனே வேறொரு வண்டியில் ஏறிக்கொண்டு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒட்டச்சொல்ல, வண்டி அந்தத் திசையை நோக்கிச் சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/116&oldid=1231939" இலிருந்து மீள்விக்கப்பட்டது