பக்கம்:வசந்த மல்லிகா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தளுக்கும் குலுக்கும்

113

அதை நடிக்கும் சாமர்த்தியம் நமக்கு வேண்டாமா? எனக்கென்ன தெரியும்?

கிரு : அந்தச் சாமர்த்தியம் உன்னிடத்தில் உண்டென்பதை நான் இத்தனை நாள் உன்னோடு பழகி அறிந்து கொள்ளா விட்டால், என்னைப்போல முட்டாளும் உண்டா? நம்முடைய வாத்தியார், ஒருவருடைய முகத்திலிருந்தே அவருடைய திறமையை ஒரு க்ஷணத்தில் அறிந்து கொள்ளக் கூடியவர். அவரே உன்னைத் தேர்ந்தெடுக்கும்போது இதில் தவறே இருக்காது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; பேசாமல் ஒப்புக்கொள்.

மல்லி : நீ இவ்வளவு சொல்லும்போது நான் தடுத்துச் சொல்லுவேனோ? ஒரு நாளுமில்லை. தவிர, இதில் நீங்களெல்லோரும் சேர்ந்திருப்பதினால், ஸ்திரீயின் கற்பு நாணம் முதலியவைகளுக்கு பழுது ஏற்படுமென்ற கவலையுமில்லை. ஆனால் நான் புதியவள்; ஒரு நாளும் நாடக மேடையில் ஏறியவளல்ல. இன்னும் அதிக நாட்களுமில்லை. நாளைய தினம் கடைசி நாடகம். இனிமேல் ஒத்திகைகளும் நடக்க வழியில்லை. வேஷமோ முக்கியமானது; பார்க்க வருபவர்களோ அற்பமானவர்களல்ல; இவர்களைப் பற்றியே நிரம்பவும் பயமாக இருக்கிறது.

கிரு : இவைகளைப் பற்றி நமக்குக் கவலையே வேண்டாம். நம்முடைய வாத்தியார் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்; கவலைப்படாதே!

மல்லி : (அரை மனதோடு) அப்படியானால் சரி; உன்னிச்சைப் படியே ஆகட்டும் - என்றாள்.

அதைக் கேட்ட கிருஷ்ணவேணி சந்தோஷ மிகுதியால் குதித்துக் கொண்டு ஒடி கோவிந்தசாமிராவிடத்தில் மல்லிகாவின் சம்மதியைத் தெரிவிக்க, அவர் உடனே அன்பான குரலில், "அம்மா ஸஞ்சலாட்சி! இப்படி வா!" என்று அழைத்தார். அவள் அவருக்கருகில் ஒருவித அச்சத்தோடும் மரியாதையோடும் நாணத்தோடும் சென்றாள். ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்த ஊர்வசி வேஷத்தின் பாடத்தை அவர் அவளிடத்தில் கொடுத்து, "நீ எப்படியாவது சிரமப்பட்டு இதை இன்றைக்குள் மனப் பாடம் செய்ய வேண்டும். நாளைக்குப் பகலிற் கடைசியாக ஒர் ஒத்திகை வைத்துக் கொள்வோம்" என்று நயமாக வேண்டிக் கொண்டார்.

வ.ம.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/131&oldid=1232121" இலிருந்து மீள்விக்கப்பட்டது