பக்கம்:வசந்த மல்லிகா.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறியலும் வறையலும்

165

"ஆம்; பயப்பட வேண்டாம்! எப்படியாவது நான் உன்னுடைய உயிரைக் காப்பாற்றி விடுகிறேன்" என்று மோகனராவ் அவளுக்குத் தைரியம் கூறினார்.

"இது கொட்டகையின் பின்புறம் அல்லவா? இங்கே சுவர் அல்லவா இருக்கிறது! வழி இல்லையே! எப்படி வெளியில் போகிறது? நெருப்பு இதோ வந்துவிட்டதே! இரண்டொரு நிமிஷத்தில் கொட்டகையே விழுந்து விடும் போலிருக்கிறதே!" என்று மல்லிகா அச்சத்தோடு கூறினாள். அதைக் கேட்ட மோகனராவ் நிமிர்ந்து அந்தச் சுவரின் மேற்புறத்தைப் பார்த்தார். அது மூன்றாள் உயரத்திற்குமேல் இருந்தது. அந்தச் சுவரின் வழியாக கூரையின் மீது ஏற யாதொரு மார்க்கமும் இல்லாமலிருந்தது. அவர்கள் கூரையின் மீது போகாமல் சற்று நேரம் தாமதித்தால், கொட்டகை முழுவதும் அப்படியே அவர்கள் மீதில் விழுந்து, அவர்களைச் சாம்பலாக்குவது நிச்சயமாய் இருந்தது. முதலில் மேன் மாடத்திலிருந்த மல்லிகாவை இறக்கிய ஏணி எங்கிருக்கிதென்று அவர் உற்று நோக்கினார். அது அதிக தூரத்திலிருந்ததும் தவிர அதற்குப் போகும் வழி முழுதும் புகையும் நெருப்புமாய் இருந்தன. இடை வழியிலிருந்த படுதாக்களும், மூங்கில்களும், கொட்டகையும் எரிந்து கொண்டிருந்தன. அந்த ஆபத்தான நிலைமையில் இருதலைக்கொள்ளி எறும்பு போலிருந்த மோகனராவ் நிரம்பவும் பதைத்து நின்றார். அவருக்குத் தாம் இறப்பதைப் பற்றி கவலையே கிடையாது. மல்லிகாவின் மாந்தளிரை ஒத்த மேனியில் ஒரு சிறிய நெருப்புப் பொறி படுவதும் அவருக்குச் சகிக்க வொண்ணாத காட்சியாக இருந்தது. படிப்படியாக ஜ்வாலை பெருகி, எங்கும் பரவி அவர்கள் மீது வீச ஆரம்பித்தது. கொட்டகையின் கடைசி வரையிலும் நெருப்புப் பிடித்துக் கொண்டது. அவளது அழகிய மேனியில் நெருப்புப் பொறி விழாமல் அவர் தமது வஸ்திரத்தால் மூடித் தமது மறைவில் அவளை வைத்துக் கொண்டு, தமது முதுகுப் பக்கத்தைக் கொட்டகைப் பக்கம் திருப்பிக்கொண்டார். நெருப்பு நிரம்பவும் கடூரமாக எழுந்து மோதி தம்மிடம் வந்ததைக் காண, அவரது தேகம் துடித்தது. என்ன செய்வதென்பதை அறியாமல் அவர் பதைத்து நின்றார். அடுத்த நிமிஷத்தில் நெருப்பு தம்மை மூடிக் கொள்ளும் போலிருந்ததைக் கண்ட மோகனராவ், "நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/183&oldid=1233854" இலிருந்து மீள்விக்கப்பட்டது