பக்கம்:வசந்த மல்லிகா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

வஸந்தமல்லிகா

ருக்கிறீர்கள்! தங்களுடைய பேருதவியை நான் ஒரு நிமிஷம் மறந்தாலும், தெய்வம் எனக்கு அநுகூலம் செய்யாது; நரகமே எனக்குப் பலிதமாகும்" என்றாள்.

மோக : மகா உதவி ஆபத்திலிருக்கும் பிறரைக் காப்பாற்ற மனிதர் கடமைப்பட்டிருக்கிறார்களே! அப்படி இருக்க, இதற்கு இவ்வளவு புகழென்ன?

மல்லி : என் விஷயத்தில் தாங்கள்தான் பேசும் தெய்வம்! நாம் இரண்டு முறை சந்தித்தோம். முதல் தடவை, நான் செய்த முட்டாள் காரியத்திலிருந்து என்னைத் தப்புவித்து என்னுடைய மானத்தைக் காப்பாற்றினீர்கள். இப்போது அகால மரணத்திலிருந்து என்னுடைய பிராணனைக் காப்பாற்றினீர்கள். என் மனசிலுள்ள நன்றியறிவின் பெருக்கை நான் எப்படி வெளிப்படுத்தப் போகிறேன்! இவைகளுக்கெல்லாம் நான் எவ்விதம் நன்றி செலுத்துவதென்பது தோன்றவில்லை.

மோக : (புன்சிரிப்போடு) அப்படியானால், நான் செய்தவைகளுக்குப் பதில் செய்ய உத்தேசிக்கிறாயா?

மல்லி : தாங்கள் செய்த உதவிக்குச் சமமாக நான் செய்யக் கூடிய காரியம் இந்த உலகில் இருக்கிறதா?

மோக : நான் செய்ததாகச் சொல்லும் உதவியைக் காட்டிலும் ஆயிரமடங்கு விசேஷமான உதவி ஒன்று உன்னிடம் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அந்த உதவியைச் செய்யும்படி நான் கேட்டால், நீ உடனே தடையில்லாமல் செய்வாய் போலிருக்கிறதே?

மல்லி : ஆகா! ஆக்ஷேபணை என்ன! என்னால் ஆகக் கூடியதானால், அவசியம் செய்துவிட்டு மறு வேலை பார்ப்பேன். இந்த உயிரே வேண்டுமானாலும் இதோ எடுத்து தங்களுடைய பாதத்தடியில் வைத்து விடுகிறேன் - என்றாள்.

அதைக் கேட்ட மோகனராவின் மனம் பதைத்தது. முகம் பலவித மாறுபாடுகளை அடைந்தது. அவர் ஏதோ ஒரு விஷயத்தைத் துணிந்து கேட்க நினைத்தார்; அவ்வாறு கேட்கக் கூடாதென்று நினைத்துச் சிறிது தயங்கினார்; மேலும் தூண்டப்பட்டு அதைச் சொல்ல நினைத்தார். அவளை முதன்முதற் கண்ட போதே அவளிடத்தில் அவருக்கு ஒருவிதமான விருப்பம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/190&oldid=1233935" இலிருந்து மீள்விக்கப்பட்டது