பக்கம்:வசந்த மல்லிகா.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டி வைக்கும் தரகர்

237



மோக : இல்லை , இல்லை. எனக்கும் அவளுக்கும் சாதாரணமாக பழக்கந்தான். உங்களிருவருக்கும் மத்தியஸ்தனாக அவள் என்னையும் அனுப்பினாள். வேறொன்றும் இல்லை. அவள் சொல்லுவதென்னவென்றால், யாதொரு விவகாரமும் இல்லாமல் சொத்துக்களைத் தாங்கள் விட்டு விடுவதானால், தாங்கள் இதுவரையில் செலவழித்ததை அவள் கேட்பதில்லையாம். அதோடு சாஸனத்தில் கண்ட தொகையையும் தங்களுக்குக் கொடுத்து விடுகிறாளாம்.

வஸ : (சந்தோஷத்தோடு) அப்படியா! இவ்வளவு தயவாக யார் செய்யப் போகிறார்கள்? எனக்கு மனப்பூர்வமான சந்தோஷம். அப்படியே செய்யலாம். சாஸனத்தை என்னுடைய ஸர்வாதிகாரி ஸகாராம் ராவிடத்தில் காட்டுவதே போதுமானது.

மோக : அவரும் அதைப் பார்த்துவிட்டு, அது சரியானது தான் என்று ஒப்புக் கொண்டு விட்டார். இப்போது அங்கிருந்தே நாங்கள் வருகிறோம்.

வஸ : அப்படியா! பலே! நீங்கள் காரியத்தை எல்லாம் நிரம்பவும் ஏற்பாடாக செய்கிறீர்கள். நிரம்ப சந்தோஷம்! இனி எந்த நிமிஷத்தில் ஒப்புவிக்கச் சொன்னாலும் நான் சித்தமாகக் காத்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு விஷயம் மிகுந்த விஸனத்தைத் தருகிறது.

தம : எவ்வளவுதான் விரக்தி ஏற்பட்டிருந்தாலும், இவ்வளவு உன்னத நிலைமையை இழப்பதில் விசனம் இருக்காதா! ஐயோ! பாவம்!

வஸ : (புன்சிரிப்போடு) நான் என்னைப் பற்றி விஸனப்படவில்லை. இவற்றின் சொந்தக்காரியான அந்த ஸ்திரீ இவ்வளவு காலம் இந்த ஐசுவரியத்தை சுயமாய் அனுபவிக்காமல் இருக்கும் படி நேர்ந்ததே என்றுதான் விசனிக்கிறேன்.

தம : அடாடா! தங்களுடைய மேன்மைக்குணம் யாருக்கு வரும்! உலகத்தில் எவனும் இவ்விதம் நினைக்கவே மாட்டான். அதிருக்கட்டும்; தங்களுக்குப் புதிதாக ஏற்பட்ட இந்த உறவினளைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை தங்களுக்கு உண்டாக வில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/255&oldid=1234080" இலிருந்து மீள்விக்கப்பட்டது