பக்கம்:வசந்த மல்லிகா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வஸந்தமல்லிகா

வெளிப்பக்கம் நோக்க, நிலவு பகலைப்போல எங்கும் தவழ்ந்து கொண்டிருந்தது. இனிமையாக வருந்தி உபசரித்து அவளை அழைத்ததைப் போலிருந்தது. அவள் மெல்லத் தனது சயனத்தை விட்டெழுந்து பின்புறமாக வெளியிற் போய், சமுத்திரத்தின் படித்துறையில் உட்கார்ந்து கொண்டாள். நிலவின் அழகினாலும், நீரின் உன்னதமான காட்சியாலும், மந்த மாருதமாய் வீசிய தென்றலின் உல்லாஸத்தினாலும், அங்கிருந்த மல்லிகை, ஜாதி, ரோஜா, பன்னீர், ஸம்பங்கி முதலிய புஷ்பங்களின் பரிமளகந்தத்தினாலும், அவள் ஆநந்தப் பரவசமடைந்தவளாய்த் தன்னை மறந்து சித்திரப் பதுமைபோல அசைவற்று உட்கார்ந்திருந்தாள்.

அந்தச் சமயத்தில் "மல்லிகா!” என்று தனது பெயரை யாரோ சொல்லியழைத்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு அவள் திரும்பிப் பார்க்க, ஜெமீந்தார் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்ததைக் கண்டு உடனே எழுந்தாள்; பின்புறத்தில் வந்து நின்ற ஜெமீந்தார், "மல்லிகா! நீயா உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? இது உண்மை தானா? அல்லது என் மனத்திலுண்டான பொய் தோற்றமா?” என்று நிரம்பவும் கனிவாகக் கேட்டார்.

உடனே மல்லிகா, "தூக்கம் பிடிக்கவில்லை; ஆகையால் இங்கே வந்தேன். வந்து நெடுநேரமாய் விட்டது; நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அதைக் கண்ட ஜெமீந்தார், "மல்லிகா எனக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. ஆகையால், படங்கள் மண்டபத்தில் மாட்டப்பட்டிருக்கும் உன்னுடைய படத்தை இதுவரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போதே அங்கிருந்து வருகிறேன்" என்றார்.

"என் படமா?" என ஆச்சரியத்தோடு கேட்டாள் மல்லிகா. "ஆம்; எல்லாம் நீயே முகமும் கண்களும் புருவ வில்லும் சுருட்டைத் தலைமயிரும் ஒவ்வொன்றும் அப்படியே இருக்கின்றன: கொஞ்சமும் பேதமில்லை” என்றார் ஜெமீந்தார்.

"அதற்கும் எனக்கும் ஈடேது? நான் கேவலம் நித்திய தரித்திரனாகிய ஒர் ஏழையின் பெண். அது கோடீசுவரருடைய சீமாட்டியின் வடிவம். அதற்கும் எனக்கும் இணைசொல்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/66&oldid=1229322" இலிருந்து மீள்விக்கப்பட்டது