பக்கம்:வசந்த மல்லிகா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்டாட்டிப்பித்து

79

அந்தச் சமயத்தில் யாரோ ஒரு ஸ்திரீ போர்வையால் தனது உடம்பை பாதாதிகேசம் வரையில் மூடிக்கொண்டு, முகத்தையும் அநேகமாய் மறைத்துக் கொண்டவண்ணம் வந்ததைக் கண்டான்; அவளது மூட்டத்திலிருந்தே அவள் தனது ஜாதியைச் சேர்ந்தவளென்று யூகித்துக் கொண்டான், நடை உருவம் முதலியவற்றிலிருந்து, அவள் யெளவனப் பருவத்தினள் என்பதையும் நிச்சயித்துக் கொண்டான்; அவளிடம் நெருங்கி, அவளது அழகைப் பார்க்க வேண்டுமென்னும் ஆசை அவனது மனதில் உதித்தது. அவன் தன்னைச் சந்தித்து அப்பாற் சென்ற மாதை நோக்கி, "அம்மா என்னைக் கூப்பிட்டீர்களா? நீங்கள் யார்? அடையாளம் தெரியவில்லையே!" என்று மரியாதையாகக் கேட்டுக்கொண்டே அவளிடம் நெருங்கினான்.

அவனது சொல்லைக் கேட்ட நமது மல்லிகா திடுக்கிட்டுத் திரும்பி நின்று, தனது முகத்தை நன்றாகத் திறந்து அவனை உற்று நோக்கினாள். அவளது முகக்காந்தியையும் கட்டழகையும் கண்டு நிரம்பவும் திகைத்த பீமராவ் தனது மனோசஞ்சலத்தை மறைத்துக் கொண்டு, "அம்மா என்னை நீங்கள் கூப்பிட்டாற் போலிருந்ததே" என்ற சம்சயமாகக் கேட்க, "நான் கூப்பிட வில்லையே” என்று சொல்லிவிட்டு நாற்புறங்களையும் அவனையும் பார்த்து, "இது எந்த இடம்" என்று மிருதுவாகக் கேட்டாள் மல்லிகா.

“இதற்கு வம்புலாஞ்சோலை என்று பெயர்; ஏன்? இங்கே யாரையாவது எதிர்பார்க்கிறீர்களா?" என்றான் பீமராவ்.

"இல்லை இல்லை" என்று சொல்லிவிட்டு தனது முகத்தை முன்போல துணியால் மறைத்துக் கொண்டு அப்பால் போய் விட்டாள் மல்லிகா. பீமராவ் அவளது பின்னழகைப் பார்த்தவண்ணம் அப்படியே சற்று நேரம் நின்றான். அவளைத் தொடர்ந்துகொண்டே போக வேண்டும் என்னும் எண்ணம் அவனைத் துண்டியது. என்றாலும், அவன் அந்த ஆசையை அடக்கிக் கொண்டு தஞ்சைப் பட்டணத்தை நோக்கி நடந்து தெற்கு ராஜவீதிக்குப் போய்த் தனது வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனைக் கண்ட ஸகாராம்ராவ், "நீ இங்கேயிருந்து போய் எத்தனை நாளாகிறது! நான் முக்கியமான சில சங்கதிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/97&oldid=1231381" இலிருந்து மீள்விக்கப்பட்டது