பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

105



முதல் கொள்ளை மரக்கலத்தை அணு - அணுவாகச் சோதனையிட்டு முடித்ததும் குமரன் நம்பிக்கு ஒரு யோசனை தோன்றியது.

குற்றுயிரும் குலையுயிருமாய்க் களத்தில் காயப்பட்டவர்களை விட்டுவிடும் வழக்கப்படி கடற்போரில் காயமுற்ற வீரர்களும் ஏனையோரும் - அவர்கள் தலைவனான ஆந்தைக்கண்ணனும் தப்பி ஓடுவதற்கு ஒரு மரக்கலத்தைத் திருப்பி அளித்துவிட்டு மற்றைய மரக்கலங்களைச் சோதனையிட்டபின் நெருப்புக்கிரையாக்கி விடலாம் என்றெண்ணினான் அவன்.

எல்லா மரக்கலங்களோடும் கடம்பர்களைத் தப்பவிட்டால்- மறுமுறை மிக விரைவிலேயே அவர்கள் படையெடுத்து வருவார்கள் என்பது உறுதி எல்லாக் கடம்பர்களையும் அவர்கள் தலைவனான ஆந்தைக்கண்ணன் உட்படச் சிறைப்பிடித்துக் கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்தில் கொண்டுபோய் அடைப்பது என்பதும் சாத்தியமான காரியமே இல்லை. அப்படிச் செய்வது அரசதந்திரமும் ஆகாது.

கடம்பர்களைக் கொடுங்கோளுரில் அதிகமாகச் சிறை வைப்பது கொடுங்கோளுர் நகரத்திற்கே பிற்காலத்தில் கெடுதலாக முடியக் கூடியது. கடலில் கொள்ளைக்குப் போனவர்கள் திரும்பி வரவில்லை என்றால் அங்கங்கே பன்னிராயிரம் முந்நீர்ப் பழந்தீவுகளில் இருக்கும் எல்லாக் கடம்பர்களும் ஒன்றுகூடிப் பலநூறு மரக்கலங்களில் கொடுங்கோளூரை நோக்கிப் புறப்பட்டு விடுவார்கள்.

எனவே பெருமன்னர் செங்குட்டுவரும் கடம்பர்களை அவ்வப் போது அடக்கித் துரத்துவது வழக்கமே ஒழியக் கூண்டோடு சிறைப் பிடிப்பது வழக்கமில்லை.

அந்த முறையில்தான் இப்போது குமரன் நம்பியும் செயற்பட விரும்பினான்.