பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

127



கொடுங்கோளுர்ப் படைத் தலைவன் இதைக் கேட்டு அமைச்சர் மேல் கோபப்படவில்லை.

அந்த ஒரு விநாடியில் வஞ்சிமாநகரம் முழுவதுமே ஒரு பெரிய வேளாவிக்கோ மாளிகையாகிவிட்டதுபோல் தோன்றியது அவனுக்கு.

அவன் கடைக்கண்ணால் அமுதவல்லியின் முகத்தை நோக்க முயன்றான். அவள் புன்முறுவல் பூத்து அந்தப் பார்வையை வரவேற்றாள்.

“இந்தப் புன்முறுவலுக்காக எதையும் பொறுத்துக் கொள்ளலாம்” என்று அவள் காதருகே மெல்லிய குரலில் கூறினான் படைத் தலைவன்.

அப்போது அவர்கள் இருவர் தலையிலும் யாரோ பூமாரி பொழிந்தார்கள். திரும்பிப் பார்த்த படைத்தலைவன் அமைச்சர் சிரித்துக் கொண்டே பூக்களுடன் அருகில் நிற்பதைக் கண்டான்.

“அமைச்சருக்கு என் சொந்த வீரத்திலும் திறமையிலும் நம்பிக்கை இல்லை. இவளைக் கடம்பர்கள் சிறைப் பிடித்ததாகக் கூறினால்தான் எனக்கு வீரமே பிறக்குமென்று முடிவு கட்டிவிட்டீர்கள் போலிருக்கிறது” என்றான் குமரன்.

“உண்மையே அதுதான் குமரா! வீரம் என்றுமே காதலின் மறுபுறமாகத்தான் இருக்கிறது. சீதை சிறைப்படவில்லை யானால் இராமன் வீரனாக நேர்ந்திருக்காது அல்லவா?” - என்று அமைச்சர் அவனுக்கு மறுமொழி கூறியபோது அவை முழுவதும் சிரிப்பொலியால் பொங்கியது. அந்தச் சிரிப்பு வெள்ளத்தில் குமரனும் அமுதவல்லியும் சேர்ந்து நகைத்த சிரிப்பின் ஒலியும் கலந்துதான் இருக்கவேண்டும்.

( நிறைவுற்றது )