பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17



சென்று அவளைக் காண்பது முடியாத காரியம். தான் வஞ்சிமாநகர் புறப்படுகிற செய்தியையும் அவளறியச் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

முகத்துவாரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் கொள்ளை மரக்கலங்கள் நெருங்கிவிட்டதாகத் தகவல் பரவிக் கொண் டிருந்தது. எனவே தலைநகருக்குப் புறப்படுவதற்கு முன் கொடுங்கோளுர்க் கடற்கரைக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிய வேண்டுமென்று தோன்றியது குமரனுக்கு. அவன் தலைநகருக்குப் புறப்பட்ட பயணத்தின் போதே போகிற வழியில் கடற்கரைப் பக்கமாகத் திரும்பினான். வாத்தியங்களின் ஒலிகளும், கீதங்களும் கேட்கும் கலகலப்பான கொடுங்கோளூர் வீதிகள் அன்று இருண்டு கிடந்தன. எங்கும் வெறிச்சோடிப் போயிருந்தது. கடற்கரை ஓரத்துச் சோலைகளும், மணல் வெளிகளும்கூட ஆளரவமற்று இருந்தன. கொடுங்கோளுர்ச் சேரமான் படைக்கோட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஆங்காங்கே புதர்களில் மறைந்து காவல் புரிந்த வண்ணம் இருந்தனர்.

படைக்கோட்டத் தலைவனான குமரனைப் பார்த்ததும் அவர்களில் சிலர் ஓடி வந்து வணக்கம் செலுத்தினர். கடலில் தொலை தூரத்தில் செம்புள்ளிகளாகத் தீப்பந்தங்கள் எரியும் மரக்கலங்கள் இருளில் மிதந்து வரும் ஒரு நகரம் போல் தெரிந்தன. பயந்த மனப்பான்மையோடு பார்ப்பவர்களுக்குக் கொள்ளிவாய்ப் பூதங்களே வாழும் பயங்கரமான தீவு ஒன்று மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருவது போல் தோன்றியது. அப்போது அந்தக் கொள்ளை மரக்கலங்கள் இருந்த இடத்தில் இருந்து கரையை நெருங்க எவ்வளவு காலமும் என்னென்ன முயற்சிகளும் தேவை என்பனவற்றையும் அனுமானம் செய்து தான் கரையிலே செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒப்பு நோக்கிச் சிந்தித்த பின்புதான் தலைநகருக்குப் போய்விட்டு வர அவகாசம் இருப்பதைத் தெளிந்தான் குமரன்.

வ-2