பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வஞ்சிமாநகரம்



படகு செலுத்திச் செல்லும்போதும் கவனமாக செலுத்திச் செல்லவேண்டியிருந்தது. இருளின் மிகுதியினால் வழி தெரியாமலோ கவனக்குறைவாகவோ பெரு மரக்கலங்களில் எங்காவது தன் படகு இடித்தோ, மோதியோ, ஓசை எழுந்தால் - உடனே பாய்ந்தோடி வரும் முரட்டுக் கடம்பர்களிடம் தான் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதையும் நன்கு உணர்ந்து, தன் விழிப்போடு இருந்தான் குமரன். ஒன்றும் புரியாமல் புதிர் போலிருந்த பல மரக்கலங்களின் பக்கங்களில் நுழைந்து திரும்பி வந்த பின்நன்கு அலங்கரிக்கப்பட்டதும் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக வேறுபட்டுத் தோற்றமளித்ததும், மிகப் பெரியதுமான ஒரு மரக்கலம் தெரிந்தது. அதன் உச்சியில் கபாலமும் கொடுவாளுமாகப் பறந்த கடம்பர்களின் குரூரமான கொடி, மேல் தளத்தில் நாட்டியிருந்த தீப்பந்த ஒளியில் மங்கலாகத் தெரிந்தது. எல்லா மரக்கலங்களிலுமே கடம்பர்களின் கொடி பறந்தது என்றாலும் இந்தப் பெரிய மரக் கலத்தில் - மிகப் பெரியதாகவும் அதிக உயரத்திலும் பறந்து கொண்டிருந்தது. தளத்தில் காவலர்களும் நின்று கொண்டிருந்தனர். குமரன் தனக்குள் சிந்தித்தான்.

‘சூழ்நிலைகளையும் தோற்றத்தையும் கொண்டு ஆராயுமிடத்து இதுதான் ஆந்தைக்கண்ணனின் மரக்கலமாக இருக்க வேண்டும். இந்த மரக்கலத்தில் ஏறிப் பார்ப்பதற்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என் ஆருயிர்க் காதலி அமுதவல்லி எங்கே சிறைப்பட்டிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.’

‘மேலே என்ன செய்யலாம்? என்ன செய்தால் நான் நினைத்தது கைகூடும்?’ - என்றெண்ணியபடியே அந்தப் பெரு மரக்கலத்தின் நான்கு பக்கத்துச் சூழ்நிலைகளையும் கணித்தறிவதற்காக வலம் வருவதுபோல் படகில் ஒருமுறை சுற்றி வந்தான்.

மரக்கலத்தின் ஒரு பகுதியில் வலிமையான கயிற்று ஏணி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கடற்பரப்பிலிருந்து மரக்கலத்தின்