பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வஞ்சிமாநகரம்



"தீவினைவசத்தால் சிலருக்கு அப்படியும் சிலசமயங்களில் கேடுகள் நேரலாம். ஆனால் எப்படி நேருமென்பதே நம் எண்ணமாக முன் நிற்குமானால் நாம் எதையுமே துணிந்து செய்வதற்கு உரியவர்களாக முடியாது.”

குமரன்நம்பியின் இந்த மறுமொழிக்குப் பின் வீரர்கள் யாரும் அவனை எதுவும் வினாவத் துணியவில்லை. சேர நாட்டு விற்கொடிச் சீலைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு வீரர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குமரன் நம்பி தன் மனத்தினுள் திட்டம் வகுக்கத் தலைப்பட்டான். கடம்பர்களை ஒடுக்கி ஒழிக்க அவன் மனத்தில் இரண்டு காரணங்களால் இப்போது அவன் சபதம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாட்டுக் கடமையைத் தவிர அன்புக் கடமையும் இதில் இருந்தது. அவனுடைய ஆளுயிர்க் காதவியைத் தேடும் கடமையும் இதில் கலந்திருந்ததனால் சபதத்துக்கு உறுதி அதிகமாகி இருந்தது. அவனுடைய திட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேற அந்த நாள் முழுதும் ஆயிற்று. அன்றிரவு மீண்டும் அவர்கள் கலந்து பேசித் திட்டமிடுவதில் கழிந்தது. அடுத்த நாள் இரவு மீண்டும் பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கடலிற் சென்று கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை அடைய வேண்டும் என்றும் தங்கள் சூழ்ச்சிகளைச் செயலாக்கிக் கடம்பர்களை முறியடிக்க வேண்டுமென்றும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். புத்தம்புதிய திரைச்சீலைகளில் எழுதப்பட்ட சேரர்களின் விற்கொடிகள் சில நூறு ஆயத்தமாகி இருந்தன. அடுத்த நாள் பகற்பொழுது முழுதும் ஒய்வாக இருந்தார்கள் அவர்கள். இரவில் உறக்கமின்றி கழிக்க வேண்டியிருந்ததால் குமரன் நம்பியும் படைக் கோட்டத்து வீரர்களும், அன்று பகற் பொழுதில் களைப்பாற வேண்டியிருந்தது.