பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வனதேவியின் மைந்தர்கள்

பகைமை கொடியது... ஒருகால் யாரேனும் மன்னரைத் துக்கிச் சென்றால் அவள் என்ன செய்வாள்?

இவளுக்கு இளைய ராஜமாதா போல் தேரோட்டத் தெரியாது. அம்பெய்தத் தெரியாது. ஈ எறும்பைக் கூடக் கொல்லமாட்டாள்... ஆனால் அந்த அன்னை அவ்வளவு தேர்ந்தவளாக இருந்ததாலேயே மாமன்னரைக் காப்பாற்றினாள். அதுவே பல குழப்பங்களுக்கு அடித்தலமாயிற்று. இரண்டு வரங்கள். புத்திர சோக சாபம்...

கையில் வில்லும் அம்பும் இருந்தாலே கொலை வெறி வந்து விடுமோ? இல்லாத போனால், அந்த மாமன்னர், கண்ணால் பார்க்காத ஒரு விலங்கை, அது தண்ணிர் குடிப்பதாக அதுமானித்து, ஒசை வந்த இடம் நோக்கிக் கொலை கார அம்பை எய்வாரா? அந்த யானையைக் கொல்லலாகாது என்று ஏன் நினைக்கவில்லை? தெய்வம் தந்த கானகம்; தெய்வம் தந்த நீர்நிலை; தெய்வம் தந்த உயிர். இன்னாருக்கு இன்ன உணவு இயற்கை நியதி. இதெல்லாம் மெத்தக் கல்வி பயின்றிருந்த மாமன்னருக்கு ஏன் தெரியவில்லை? குருட்டுப் பெற்றோரின் ஒரே மகனை அந்த அம்பு கொலை செய்தது. எந்த ஒரு கொலைக்கும் பின் விளைவு இல்லாமல் இருக்காது!.. இப்போது. ஏன் மனம் குழம்புகிறது?

“அம்மா? ஏணிப்படி வாட்டமாக அமர்ந்திருக்கிறீர்கள்? அரசமாதாக்களை வணங்கி ஆசிபெற வேண்டாமா?... அவந்திகா இன்னமும் பெட்டிகளைச் சித்தமாக்குகிறார். பிறகு என்னைக் கோபிப்பார், மன்னர் வந்துவிட்டார் என்றால்...”

இவள் சொல்லி முடிக்கு முன், நிழல் தெரிகிறது. பட்டாடை அசையும் மெல்லொலி...

இளையவர்... தம்பிதான்.

கோபமா, அல்லது துக்கமா?