பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

125

குடிக்கச் செய்து பகை மன்னரின் கோட்டைச் சுவர்களைத் தகர்க்கச் சொல்வார்களாம்! அப்படியா சுவாமி!”

நந்தமுனி புன்னகை செய்கிறார்.

“அதைப்பற்றி நாம் ஏன் இப்போது சிந்திக்க வேண்டும். நாமும் இப்போது அந்த யானைக் கூட்டத்தோடு போகிறோம். நமக்கு அவர்கள் நண்பர்கள். அவர்கள் எங்கே போகிறார்கள் தெரியுமா?”

“எங்கே?.”

“நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே தான் போகிறார்கள். வாழை வனம்”

“வாழை வனத்தில் யானை புகுந்து அழிக்குமா?”

“யானைகள் அழிக்காது. யானைகளோ வேறு விலங்குகளோ வனங்களை அழிக்கா. மனிதர்தாம் அழிப்பவர். யானைகள் உணவு தேடிச் செல்லும், இன்ன இன்ன இடங்களில் உணவு இந்தந்தக்கால இடைவெளியில் கொள்ளலாம் என்ற உணர்வு அவைகளுக்கு உண்டு. வாழை வனம் வந்து இந்த மந்தை இப்போது உண்டு சென்றால், மீண்டும் ஒரு பருவம் வந்தபின் வரும் போது செழித்திருக்கும். யானைகள் உண்டு வனங்கள் அழிந்ததாக வரலாறே இல்லை. முன்பு ஒரு முறை மிதுனபுரி மன்னர் அவ்வனத்தை அழித்தார் என்பார்கள். யானைகள் வருவதைத் தடுக்க முடியவில்லை. நாம் அவைகளுக்குத் தீமை செய்யவோ, கிடங்கில் தள்ளிப் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து அடிமைகளாக்கவோ முயலுகிறோம் என்றால் காடு கொள்ளாமல் பிளிறி, நாசம் செய்யும். எத்தனை கயிறுகள் கட்டினாலும் அறுத்துவிடும். மனிதர் கிட்ட வரவொட்டாமல் குதித்து, அறைந்து கொல்லும். ஏன், குட்டியைப் பற்றி விடுவார்களோ என்று தாய் குட்டியைக் கூடக் கொன்று விடும். அதுவும் உண்ணாமல் இருந்து மடியும். மனிதர் செய்யும் பாவங்களில் தலையாயது இத்தகைய பிராணிகளை அடிமையாக்குவது தான்!...”