பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

127


“அந்தக் குட்டியை நான் தொட்டுக் கொஞ்சலாமா, சுவாமி?”

அவர் சிரிக்கிறார். பிறகு அவளைப் பற்றி அருகே அழைத்துச் சென்று தாய் யானையைத் தொடச் செய்கிறார். அவள் பரவசமடைகிறாள். யானைக் கூட்டமே நிற்கிறது. முதலில் சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்கிறது. அப்போது, நாடி நரம்புகளில் அச்சத்தின் குளிர்திரி ஒடச் சிலிர்க்கிறாள்.

காட்டு யானைக் கூட்டத்தின் இடையே புகுவது சரியன்று: மனிதர்கள் அருகில் கண்டால் இழுத்துத் தள்ளி மிதித்துக் கொல்லும் என்று சொல்வார்கள். கோதாவரிக்கரையில் யானைகள் நீர் குடிக்க வரும். அப்போது, அவள் நாயகன் எச்சரித்து, இளையவரை வில்-அம்புடன் நிற்கச் செய்வான்.

அருகில் இருந்து அக்கூட்டத்தைப் பார்த்தவாரே. குட்டியானையைக் குனிந்து தடவிக் கொடுக்கிறாள். அப்போது தான் கூட்டத்தில் நான்கைந்து யானைக்கன்றுகள் இருப்பது தெரிகிறது. ஆண்கன்று ஒன்று முளைத்த கொம்புடன் மற்றவரை நெட்டித் தள்ளுகிறது. தும்பிக்கை வளைத்து ஆட்டம் ஆடித் தன் துருதுருப்பை வெளியாக்குகிறது. குடுகுடென்று அது ஒடி ஏதோ ஒரு கிளையை ஒடித்து வாயில் திணித்துக் கொள்கிறது. அதன் தாயோ, தந்தையோ, அதன் வாயைப் பற்றி இழுத்து, ஏய் சும்மா இரு’ என்று மிரட்டுகிறது.

பூமகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அந்தக் குட்டியானையைத் தடவிய வண்ணம் இருக்கிறாள்.

அப்போது நந்தமுனி, “கஜராஜா!” என்று குரல் கொடுக்கிறார். முன்னே சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்க, நந்தமுனி அதன் அருகில் செல்கிறார். குறும்பு செய்யும் கன்று குடுகுடுவென்று வருகிறது. குட்டி ஒன்று தாயின் மடியை முட்டுகிறது; செல்லமாகக் குரல் கொடுக்கிறது ஒரு கிழட்டு யானை. முன்னே வந்து தலைமைக் கொம்பனுடன் உராய்கிறது.