பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

15

“அவந்திகா, மன்னர் ஏன் முன்போல் இங்கே வருவதில்லை? அப்படி என்ன அரசாங்க அலுவல்கள்?

“பெண்களாகிய எமக்கென்ன தெரியும்?... தேவி, இரண்டே கவளம்தான் உணவு கொண்டிருக்கிறீர்கள். உடல் வெளுத்து, இளைத்து விட்டது. ராணி மாதா எங்களைத்தாம் குறை சொல்வார்கள்...”

பூமகள் தன் மனச்சுமையை எப்படி வெளியிடுவாள்? அரக்கர்கோனின் அந்தப்புரத்தோட்டத்தில் அவள் நெருப்பு வளையத்துள் சிறையிருந்தபோதுகூட, இத்துணை மனச்சுமை இருக்கவில்லை போல் தோன்றுகிறது. இந்நாட்களில் மிக அதிகமாக ஒரு வெறுமை அவளை ஆட் கொண்டிருக்கிறது. இத்தனை வசதிகளும் பணியாளரும், தன்னை அன்னைக்கு அன்னைபோல் மடியிலிருந்து, மார்புப்பால் கொடுத்து வளர்த்த செவிலியும்கூட உணர்ந்து கொள்ள முடியாத, பகிர்ந்து கொள்ள முடியாத சுமையாகக் கனக்கிறது.

அவளை உணவு கொண்ட களைப்புத்தீர, மஞ்சத்தில் இருத்துகிறாள் அவந்திகா. நந்தினி மயில்தோகை விசிறியுடன் வருகிறாள்.

இதை மென்மையாக மேனியில் தடவும்போது உறக்கம் வரும்; மன அமைதி கிட்டும் என்பது அவந்திகாவின் அநுமானம்.

அப்போது, வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு விமலை ஒடி வருகிறாள். நந்தினி விசிறியை வைத்துவிட்டு, உமிழும் எச்சிற் தம்பலத்தைக் கொண்டு வருகிறாள்.

“ஓ! எனக்குத்தான் எத்தனை மறதி, தேவி! வெற்றிலை மடித்துக் கொடுக்கும் நினைவே இல்லை...”

அவந்திகா தன்னையே கடிந்து கொண்டு, வெற்றிலைகளை எடுத்துத் துடைத்து, வாசனைப் பொருட்கள் சுண்ணம் சேர்த்து, மடித்து அவளிடம் தருகிறாள். அவள் மனதில்,அந்த ஆலமரத்து மேடையில், அவள் புக்ககம் வந்த புதிதில், மருட்சியை நீக்கும் வகையில் மென்மையாகச் சரசமாடியதும், வெற்றிலை மடித்துத் தந்ததும் நினைவுக்கு வருகிறது.