பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வனதேவியின் மைந்தர்கள்

பொல்லென்று உதிரும் மாட்சியை அவள் இதுபோல் பார்க்கவில்லையா?...

கானகம் புதிதில்லை. என்றாலும் இப்போது புதியதொரு பட்டாடை கொண்டு பழைய நினைவுகளை மூடிவிட்டுப் புதியவளாக இயங்குவதாக உணருகிறாள்.

ஒருநாள், முற்பகலில் அவள் இதுபோன்று மலர் சேகரிக்கும் நேரத்தில், திடுமென்று கருமையாகத் திரண்ட வானில் பளிரென்று மின்னுவது போல் ஒரு குலுக்கல் அவளுக்கு ஏற்படுகிறது. ஓர் அதிர்வு. என்ன ஓசை? இடியோசையா? இல்லையே? வில்லில் நாணேற்றி விடும் ஓசையா? அந்நாள் அவள் தந்தை பாதுகாத்து வைத்திருந்த வில்லை எடுத்து நிறுத்தி நாணை இழுத்து எழுப்பிய ஓசை. இப்படித்தானே இருந்தது? அவள் உள்ளமும் உடலும் பொல்லெனப் பூரித்த உணர்வு மறக்கக்கூடியதா என்ன? வானமே பூச்சொரிந்தாற்போல் உணர்ந்தாள். சுரமை, ஊர்மி எல்லாரும் அவளைக் கேலி செய்தார்கள். நாணம் கொண்டு முகம் மறைத்தாள்.

அவளுக்கு மணமாலையை உறுதி செய்த ஒலி அது. அடுத்து, அவள் எப்போது அந்த ஒலியைக் கேட்டாள்? காட்டில், இளையவனை, ‘போ’ என்று விரட்டினாளே, அப்போது அந்த ஒலி கேட்டது. அந்த நாண் இழுபடு ஓசை அவளைக் கொண்டவனின் கையால் யாருக்கோ ஏற்படும் மரணம் என்று உணர்த்தியது. அவள் சூர்ப்பனகையாக இருப்பாளோ என்று கூட அப்போது பேதலித்தாள். இப்போது. அந்த நாண் இழுபடு ஓசையல்லாமல், வேறு எந்த அதிர்வு அவள் உள்ளுணர்வைக் குலுக்கியது? பெரியன்னையிடம் ஓடி வருகிறாள். குழந்தைகள் இருவரும் பெரியன்னை திரிக்கும் நூலைச் சிக்கலாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருகில் இரண்டு பெண்கள் மூங்கில் கிழித்துக் கூடை முடைகிறார்கள்.

“பெரியம்மா, இப்போது பூமி அதிர்ந்தாற்போல் ஓர் இடிமுழக்கம் கேட்கவில்லை?”

அவள் இவளை உற்றுப் பார்க்கிறாள்.