பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

173

“இருக்கும். கோடையில் இப்படித் திடுமென்று எங்கேனும் வானம் கறுத்து இடிக்கும். எனக்குதான் செவிகள் மங்கலாகி விட்டன. ஏம்மா, பஞ்சமி இடி இடித்தது?”

இவள் பற்களைக் கறுப்பாக்கிக் கொள்ளவில்லை. பளீரென்று சிரிக்கிறாள்."எங்கோ யானை கத்திச்சி... அதா. இங்க வராது!” என்று நிச்சயமாக அச்சமின்றி உரைக்கிறாள்.

“யானையின் பிளிறலா அது?...”

ஆம்; உண்மையாகவே யானையின் பிளிறல் கேட்கிறது. பஞ்சி கைவேலையை விட்டுவிட்டு முற்றம் கடந்து போகிறாள். காற்றுக்கு ஆடும் தளிர்போல் அவள் பெரியன்னை கையைப் பற்றிக் கொள்கிறாள்.

சற்றைக்கெல்லாம், சோமியும் கைவேலையைப் போட்டு விட்டு யாரையோ அழைத்தவாறு ஓடுகிறாள்.

சத்தியமுனி, செய்குளத்தைத் துப்புரவு செய்த கோலத்தோடு “என்ன கலவரம்?” என்று வருகிறார். அவர் முகத்தில் இருந்து வியர்வை பெருகுகிறது.

“மகளே, குழந்தைகளுடன் குடிலுக்குப் போங்கள்” என்று கூறியவராய் அவர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு செல்கையில், பசுவினங்கள் மணிகுலுங்க ஓடிவருகின்றன. பறவைகள் நேரமில்லா அந்த நேரத்தில் வானில் வட்டமிடுகின்றன. காடன், ஒலி, மாரி, ஆகிய வேடர் கூட்டம், வில் அம்புகள் ஏந்தியவர்களாய் வருகிறார்கள்.

“... எல்லோரும் நில்லுங்கள்! என்ன ஆயிற்று இப்போது?...”

“சாமி, ஏதோ ஆபத்து நடந்திருக்கு. யானைகள் இப்படிக் கத்தியதில்லை. பசு-பறவை எல்லாம் நிலைகுலையுமா? நம்ம கரும்புத் தடியத் தின்ன யானை வரும். நந்தமுனி ஒடிச்சிக் குடுப்பார். பிள்ளைங்க வாங்கிட்டுப் போறாப்புல போகும். இப்ப அதுங்க ஏன் ஆபத்து வந்தாப்புல அலறணும்?”