பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வனதேவியின் மைந்தர்கள்

“சரி, நீங்க வில் அம்பப் போட்டுட்டுப் போயி என்னன்னு பாத்திட்டு வாங்க!”

அவளால் குடிலுக்குள் சென்று அமைதியாக இருக்க முடியவில்லை. சிறுவர்களைக் குடிலுக்குள் கட்டிப்போட முடியுமா? அவர்களால் நொடிப்பொழுதுகூட அமைதி காக்க முடியாதே?

தபதபவென்று சிறுவர்கள் ஓடுவதை உணர்ந்தாற்போல் இவர்களும் வெளியே ஓடிப் புதர்களுக்கிடையில் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அப்போது ஒர் அணில் குதித்துப் போகிறது. வால் நீண்ட குருவி புதரில் இருந்து ஒடுகிறது.

“வா... வா... விளையாடலாம்!” என்று பெரியவன் அழைக்கிறான்.

“அஜயா, விஜயா, இங்கே பாட்டன் பக்கம் வாருங்கள்!” என்று சத்தியர் அவர்களை அருகில் அழைத்துக் கொள்கிறார்.

பூமகளின் கலவர முகம் பார்த்து பெரியன்னை தேற்றுகிறாள்.

“ஒன்றும் நேராது. இந்த வனத்தில் எந்த அசம்பாவிதமும் நேராது. அமைதி கொள் மகளே.”

“இல்லை தாயே. இந்த ஓசை. எங்கோ ஒரு கொலை விழும் ஓசை. இந்தப் பிள்ளைகளுக்குப் பாட்டன், யானை தண்ணீர் குடிக்கும் ஓசை என்று ஓசை வந்த திக்கை நோக்கி அம்பெய்ததன் பயனாக, கண்ணில்லாப் பெற்றோரின் ஒரே மகன் மாண்டான். தொலைவில் இருந்து கண்காணாதபடி, மந்திர வித்தையைப் பிரயோகித்து அம்பெய்தும் திறமை என்று பெருமை பேசுவார்கள்...”

இவள் பதை பதைக்கையில், முயல்கள், முள்ளம்பன்றிகள். ஏதோ நேர்ந்துவிட்டாற்போன்று பரபரப்புடன் புதர்களை விட்டு வெளியேறுகின்றன.

பூமகள் தன் நிலை மீறி முற்றம் கடந்து செல்கிறாள். பாம்புகள் ஊருகின்றன.