பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வனதேவியின் மைந்தர்கள்

அவள் இட்டிருந்த நெருப்பு வளையத்தை அவர் அறிந்திருப்பாரா? திரிசடை மட்டுமே இதமாக அவளைப் புரிந்து கொண்டவள். மற்றவர் எவரேனும் இலங்கை வேந்தனின் பராக்கிரமங்களின் புகழ்பாடி அவளை மனம் கொள்ளச் செய்ய வந்தால், உயிரைவிட்டு விடுவாள் என்பதே அந்த வளையம். அவ்வளையத்தை உயிர்ப்பித்து அவர்களை அச்சுறுத்தி வைத் திருந்தவள் திரிசடைதான். அக்காலத்தில் அசோகவனத்தின் எழிலார்ந்த அருவிக்கரையில் தன் பதியுடன் கோதாவரிக்கரையில் கழித்த இனிய பொழுதை உன்னுவாள். அந்தக் காற்றும், அருவிநீருமே அவளுக்கு அன்னமும் பருகு நீருமாய் இருந்தன. அசைக்க முடியாத நம்பிக்கையால் கோட்டை ஒன்று கட்டிஇருந்தாள். அதனுள், ஒரு சிறு திரியிட்டு ஒளித்தீபம் ஏற்றி வைத்திருந்தாள்... பத்து மாதங்கள்...

அவளுடைய நம்பிக்கைக் கோட்டை தகரவில்லை. அவள் பதி வந்து, இலங்கையில் வெற்றிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால்... ஆனால்... அவள் ஏற்றிவைத்திருந்தாளே, சிறு திரி கொண்டு ஒளித் தீபம்...? அதை அவர் அனைத்து விட்டார்.

அவள் விம்மி விம்மி அழுகிறாள். தோள்கள் குலுங்க அழுகிறாள்.... அவந்திகா பதறிப் போகிறாள்.

“தேவி தேவி! ... நான் அருகிருக்கையில், மகாராணிக்கு என்ன துயரம் வந்தது?.

குளிர்நீர் கொண்டு முகத்தைத் துடைக்கிறாள்.

“தீபம் அணைந்துவிட்டது, தாயே? தீபம். சிறுதிரி இட்ட தீபம்.”

“எந்த தீபம்...? எது? ஒ, மாடத்தில் இருக்கும் தூங்கா விளக்கா? அடி விமலை? விசயை?...” என்று அவந்திகா குரலெடுத்துக் கூறிக்கொண்டு போகிறாள்.

அப்போது, ஒற்றை நாண் தம்பூரின் சுருதி செவியில் ஒலிக்கிறது. ஒற்றை நாண்... தம்பூரு...

பரபரப்புடன் அவள் இறங்கி, சாளரத்திரையை அகற்றி வெளியே பார்க்கிறாள்.