பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

19


2

ஒற்றை நாணின் மீட்டல்.

கி...ய்.. கிய்.. கிய்.. கில்.ரீம்... ரீம்...

இது ஏதேனும் வண்டின் ரீங்காரமோ?

அந்த மீட்டொலி அவள் செவிகளில் நிறைந்து, நாடி நரம்பெல்லாம் பரவுவதாக உடல் புல்லரிக்கிறது. நினைவுகளில் முன்னறியாத ஓர் ஆனந்தம்.

“அவந்திகா?.... ஏதோ ஓர் இசை கேட்கவில்லை ?..”

“இசையா?”

அவள் புருவம் சுருக்குகிறாள். வந்தியும் மாதுரியும் ஏதேனும் இசைபயின்று கொண்டிருப்பார்கள். அரண்மனையில் நடனமாடுபவள் வந்தி. அவர்கள் பயிலும் இடம் இங்கே இல்லையே? அதுவும் இந்தப் பிற்பகல் நேரத்தில் அழைத்தாலொழிய எவரும் யாழை எடுத்துக் கொண்டுவரமாட்டார்களே?

“.. தெரியவில்லையே தேவி?”

“ரீம்... ரீம்... ரீம்..” சுருதி... துல்லியமாகக் கேட்கிறது. பாடலின் சொற்கள் புரியவில்லை. ஆனால் இசை. அவளைச் சிலிர்க்க வைக்கும் இசை... பூமகள் சாளரத்தின் வழியே கீழே தோட்டமெங்கும் பார்வையால் துழாவுகிறாள். அந்த நாதம், அவளை அற்புதமாகக் கழித்த கனவுலகுக்குக் கொண்டு செல்கிறது.

ஆம்... மரக்கிளைகளின் பசுமைக் குவியல்களிடையே, சத்தியத்தின் குறுத்துப்போல் ஓர் உருவம் தெரிகிறது.

நினைவுக்குவியல்களில் மின்னல் அடித்தாற்போல் பாடலின் வரிகள் உயிர்க்கின்றன.

தாயே, தருநிழலே, குளிர் முகிலே...

இந்தப் பாட்டுக்குரியவர்.