பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

57


சற்று எட்ட, ஜலஜை, சாமளி இருவரும் நிற்கின்றனர். சுலபாக்கிழவி மன்னருக்கு வரவேற்பு வாசகம் சொல்லி நடுங்கும் குரலில் பாடுகிறாள்.

கோசல குமாரருக்கு மங்களம் குவலய வேந்தருக்கு மங்களம், அரக்கர் குலம் அழித்தவர்க்கு மங்களம், அவனியாளும் மன்னருக்கு மங்களம்.

அவளையும் அருகில் இருத்தி ஆரத்தி எடுத்து, கண்ணேறு கழித்து, அந்தக் கிழவி சடங்கு செய்கிறாள்.

பூமகளுக்கு இதொன்றுமே உவப்பாக இல்லை. மன்னர் என்றால் இப்படியா? ஒர் அந்தரங்க - நேர்ச்சொல் உரைக்கவும் இடமில்லாத அரண்மனைக் கட்டுப்பாடுகள்!...

“தேவி, நீராடப் போயிருந்தாயா?...”

“அதுதான் தெரிகிறதே?” என்று முகத்தில் சுணக்கம் காட்டுகிறாள். “உங்கள் அரச நெறிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் அந்த அவையோடு இருக்கலாம். சொந்த மனைவியுடன் இரண்டு பேச்சுப் பேசக்கூட இவ்வளவு விதிகள் - வரைமுறைகளா?”

அவள் உரத்த குரலில் கேட்கவில்லை. தலை குனிகிறாள். மன்னர் அவள் மென் கரத்தைப் பற்றுகிறார்.

“இரண்டு மூன்று நாட்களாக எனக்கு இங்கு வர வேண்டும் என்று உள்ளம் விரும்பவும், இயலாதபடி அலுவல்கள், மகாராணி இந்த மன்னரான அடியவனை மன்னிக்க வேண்டும்...”

காதோடு சொல்லும் இவ்வார்த்தைகளில் அவள் முகத்தில் வெம்மை ஏறுகிறது.

‘செண்பகத் தோட்டத்துக்குப் போகலாமா? உனக்குத்தான் அந்தக் குளத்தில் வந்திறங்கும் பறவைகளை அன்னங்களைப் பார்க்க மிகவும் பிடிக்குமே? நாம் மகிழ்ந்த கோதாவரிக்கரைத் தோட்டங்களைப் போல் சரயு ஆறுவரையிலும் தோப்பாக, தோட்டங்களாக அமைந்து விடலாம்.அதே மாதிரி பொய்கைகள், யானைக்குட்டிகள்...”