58
வனதேவியின் மைந்தர்கள்
‘அரச காரியம் பற்றிப் பேதையான எனக்கு எதுவும் தெரியாதுதான்... என்றாலும், தந்தையிடம் அநுபவம் பெற்ற மூத்த அமைச்சர்பிரான், சுமந்திரர் கவனிக்க மாட்டாரா?...”
“தேவி, அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றனவே, பதினான்கு ஆண்டுகளில் பத்து மாதங்கள் தானே உன்னைவிட்டுப் பிரிந்து இருந்தேன்?.”
‘பத்துமாதங்கள் தவிர...’ அந்தச் சொல் பொன் ஊசியாகக் குத்துகிறது. அவந்திகா அங்கே நிற்கும் பணிப்பெண்களை, குறிப்பாக ஜலஜையை விரட்டுகிறாள்.'இப்போது எதற்கு நீங்கள் மன்னருக்கும் மகாராணிக்கும் இடையில் அவரவர் வேலையைப் பாருங்கள்!”
பூமைக்கு மன்னருடைய கை, தொட்டுணர்வு, குளிர்ச்சியாக இருக்கிறது. வழி நெடுக அவள் எதையும் பார்க்கவில்லை; பேசவுமில்லை. காட்டில் இருந்த அந்தக் காலத்தில், வில்லையும் அம்பையும் சுமந்து திரிந்தீர்கள். இப்போது அரசாங்க காரியம்...
ஒரு மனிதராக.. சாதாரண மனிதரின் ஆசாபாசங்கள் உங்களிடம் இல்லையா?
மனதுக்குள் மூர்க்கமாக எழும்பும் பாம்புகளைப் போல் இவ்வினாக்கள் சீறுகின்றன.
அடங்கு அடங்கு. அடங்கு மனமே!... அடங்கு!
மெல்லிய பட்டுத் தைத்த தோல் காலணிகளை அவள் அணிந்திருக்கிறாள். செண்பகத் தோட்டத்தின் பறவையொலிகள் மிக இனிமையாகக் கேட்கின்றன. ஒரு மகிழ மரம் கிளைகளை வீசிக்கொண்டு, ‘நான் இங்கே உங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்து ஆளாக இருக்கிறேன்!’ என்று தன் பழம் பெருமையை சாற்றிக் கொண்டு அவர்களை ஆசிர்வதிப்பது போல் மலர்களைச் சொரிகிறது.
‘என்ன வாசனை? இதற்கு ஏன் செண்பகத்தோட்டம் என்று பெயர்?’ என்று வியந்து அதன் அடியிலுள்ள மேடையில் அவள் அமருகிறாள்.