பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வரலாற்றுக்கு முன்


ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் அடியெடுத்து வைத்த ஆரியர் அங்குள்ள திராவிட மக்களையும் பிறரையும் அடித்துத் துரத்தித் தம்மை நிலை பெறுத்திக்கொண்டு இருக்கு முதலிய வேதங்களை யாத்தனர் என்பதும், அவருள் ஒரு சாரார் மெள்ள விந்திய மலையைக் கடந்து தமிழ் நாட்டிலும் புகுந்து தம் பழக்க வழக்கங்களைப் பரப்ப முயன்றார்கள் என்பதும், சிறந்த ஒழுக்க நெறியும் பண்பாடும் பிற நல்லியல்புகளும் கொண்ட தமிழர் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், இரண்டொரு கரணங்களை எப்படியோ மெள்ளப் புகுத்தினர் என்பதும், தொல்காப்பியர் அவை பற்றியெல்லாம் எண்ணி எண்ணி அளந்தே சொன்னார் என்பதும், அவர் காலத்திற்குப் பிறகு தமிழ் நிலம் குறுகியிருக்கலாம் என்பதும், அவர் ஆரிய நூலார் வழி இலக்கணம் பயின்றார் என்பது பொருந்தா என்பதும், அவர் காலத்துக்குப்பின் ஆரியர் மெள்ள மெள்ளத் தம் ஆதிக்கத்தைப் பல வகையில் - பண்பாடு, கலை, வழக்கம் முதலியவற்றால் - செலுத்த முயன்று ஓரளவு வெற்றி பெற்றனர் என்பதும் அறியக் கிடக்கின்றன. அவர்கள் பெற்ற வெற்றி நிலையான ஒன்று அன்று என்பதையே அன்றுதொட்டு இன்றுவரை வடநாட்டுத் தென்னாட்டுப் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதையே வெல்ஸ் என்பார் தம் வரலாற்று நூலில் ஆரியர் திராவிடர் மேல்கண்ட வெற்றிவடநாட்டார் தென்னாட்டார் மேல் கொண்ட வெற்றிநிலையான ஒன்று அன்று என்றும், மேலுக்குத் தென்னாடு வடநாட்டுக்குத் தாழ்ந்துவிட்டது போலத் தோன்றினும் உண்மையில் அது சரியன்று என்றும், அவ்விரண்டின் போராட்டம் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது என்றும் கூறுவர்.

இவ்வாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் பின்னும் வடநாடும் தென்னாடும் பல வகையில் இணைந்தும் பிணைந்தும் சில வகையில் மாறுபட்டும் இருந்தன என்பது தேற்றம்.