பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் இராவணனும்

155



தவறு இழைப்பவர், தோல்வியுற்று இறப்பவர் அனைவரும் தம் இனத்தவர் என்ற தாழ்வு மனப்பான்மை தமிழர் சிலரிடம் உள்ளமையே இந்த எண்ணத்துக்குக் காரணமாகின்றது. தோற்றவர் அனைவரும் தமிழர் என முடிவு செய்கின்றனர்; இரணியன், சூரபதுமன், இராவணன் அனைவரும் தமிழரே என்கின்றனர். எனினும், நன்கு ஆராய்ந்து பார்த்தால் அனைவரும் ஆரிய மரபினரே என்பது தெளிவாக விளங்கும். தோல்வி மனப்பான்மையை விட்டுத் தமிழர் எண்ணுவாராயின், இதை ஏற்பர்.

இந்தப் புராண இதிகாசங்களெல்லாம் ஆரியர் வட விந்தியாவுக்கு வந்த பின்னர் உண்டான நூல்களேயாகும். அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரப்பவும், தங்கள் ஆதிக்கம் விரிந்துள்ளதைக் காட்டவுமே இராமாயணம் போன்ற கதைகளை எழுதினார்கள் என்பர் வரலாற்று ஆசிரியர். எனவே, இவை நடைபெற்றவை என்றே கொள்ளத் தேவை இல்லை. அன்றி, அவ்வாறு நடை பெற்றவை எனக் கொண்டாலும், அவர்களுக்குள் நடைபெற்ற ஒரு போராட்டமே அன்றி, திராவிடருக்கும் இக்கதைக்கும் தொடர்பே இல்லை. ஆயினும், இராவணன் தெற்கே உள்ள ஒரு தீவில் வாழ்ந்தவனாகக் காட்டப் பெறுகின்றமையின், அங்கே எப்படி ஆரியர் வந்திருக்கக் கூடும் என்ற ஐயம் எழுவது இயல்பு. இதை வெறுங்கற்பனைக் காவியம் எனக் கொள்ளின், தங்கட்கு மாறுபட்டவராகிய திராவிடர் வாழ்கின்ற தெற்கை எல்லையாக்கி ஆரியர் கதை எழுதினர் எனத் தள்ளிவிடலாம். அன்றி, உண்மையாகவே நடந்ததாகக் கொண்டாலும், அந்த இராவணன் ஆண்டதும்இன்றும் வீடணன் மாளாது அரசியற்றுவதுமாகிய தீவு திட்டமாக இந்த இலங்கை அன்று என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும். சிவதருமோத்திாம் என்னும் நூல் பொதிய மலைக்குத் தென்பால் மகேந்திரமலை இருந்ததெனவும், அதன் அடிவாரத்தில் பொன் மயமான இலங்கை இருந்ததெனவும் குறிக்கிறது.