பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

29


என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் வாகடகர் ஆட்சி எழுமுன் மத்திய இந்தியாவில் சாதவாகனர் ஆட்சியே சிறந்திருந்ததென்பதை ஸ்மித்தும் பிறரும் நன்கு காட்டுகின்றனர்[1]. மற்றும் ஸ்மித்து. கி. மு. 20ல் ரோமர் தமிழ் நாட்டில் இருந்தனரென்றும், அகஸ்தஸ் பாண்டியரிடம் தூதனுப்பினார் என்றும் குறிக்கின்றார்[2]. மற்றும் அவரே சங்க காலத்தில் ஆரியர் ஆதிக்கம் தென்னாட்டில் அதிகம் வளரவில்லை எனவும் காட்டுகின்றார்[3]. நாம் இங்கு இந்த நூலில் அந்தக் கால எல்லையில் நின்று, காப்பியக் காலத்துக்கு முன் கடைச்சங்க கால எல்லை வரையிற் காணல் நலமாகும். எனவே வரலாற்று எல்லை விளங்காத அந்தப் பழங்காலத்தில், வடக்கும் தெற்கும் இணைந்த வகையில் ஒரு சிலவற்றை எண்ணி எழுதுவது பயன் உடைத்தாம் எனக் கருதுகின்றேன்.

குமரிக் கண்டம் வாழ்ந்த அந்த நெடுநாள் தொடங்கிக் கடைச்சங்க காலம் வரையில் வடநாடும் தென்னாடும் பல வகையில் இணைந்து நின்ற வரலாறு ஏட்டில் அடங்காதது. அதை ஆராய இன்னதென எல்லை காட்ட முடியாத நீண்டகால ஆராய்ச்சி தேவை. உலகெங்கணும் அறிஞர்கள் அந்த உண்மையைக் காணத் துடிதுடித்து ஆராய்ந்துகொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஆராய்ச்சிகளெல்லாம் வளர வளர, எத்தனையோ புதுப் புது உண்மைகள் புலப்படும் என்பது உறுதி. சிந்து வெளியின் அகழ்ந்தெடுப்பு, பழம்பேரிந்திய நாட்டு வரலாற்றையே மாற்றிவிடவில்லையா எதிர்காலத்தில் அதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை புதுப் பொருள்


  1. Oxford History of India. p. 140. Political History of India. p. 342.
  2. Oxford History of India. p. 160.
  3. ibid p. 161.