பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வரலாற்றுக்கு முன்


பிணைந்து வாழ்ந்திருந்தன எனக் காட்ட இயலும். ஆட்சியினாலும், பண்பாடு, நாகரிகம், கலை, இன்ன பிறவற்றாலும் பெரிதும் இன்றுபோலவே அன்றும் இரண்டும் ஒன்றாய் இணைந்து வாழவில்லை என்றாலும், இரு நாட்டினரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தனர் எனப் பல இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும், ஆரியர் வடநாட்டுக்கு வருமுன் அனைத்திந்தியாவிலும் ஒரே இனம் இருந்தது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவ்வுண்மையை வேறு ஒரிடத்தில் ஆராய்ந்து காணலாம். இங்கே தமிழ் இலக்கிய வடநாட்டு இலக்கிய வரலாற்றுக் காலந்தொடங்கி அவை ஒன்றை ஒன்று எவ்வாறு தழுவிக் காட்டுகின்றன என்பதையும் அக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த பிற நாட்டவர் எவ்வெவ்வாறு இணைத்துக் கண்டார்கள் என்பதையும் காண்பது போதும் என நினைக்கின்றேன். சிறப்பாகத் தமிழ் இலக்கியத்தில் வடநாட்டுக் கதைகளும் பிறவும் எவ்வெவ்வாறு எடுத்தாளப் பெறுகின்றன என்பதை முதலில் ஆராய்ந்து காணலாம், தொல்காப்பியர் காலந் தொடங்கிக் கடைச்சங்க காலம் வரையில் தோன்றி மறைந்தன போக, எஞ்சி வாழும் இன்றைய தமிழ் இலக்கியங்களைத் துருவி நோக்கின், பல உண்மைகள் விளங்கும் என்பது உறுதி.

பாரதம் இராமாயணம் என்னும் இரண்டும் வடநாட்டுக் கதைகளே. வேதத்தில் இராமனும் கண்ணனும் கூறப்படாவிடினும், பின்னர் அவர்கள் வடநாட்டு இலக்கியத் தலைவர்களாய் நிலைத்த இடம் பெற்றுவிட்டார்கள். P.T. சீனிவாச ஐயங்கார் காட்டுவது போன்று, கண்ணன் திராவிட இளைஞனாகக்[1] காணப்பெறினும், இருக்கு வேதத்தில் அவன் ஆரியர்களை எதிர்த்த திராவிடத் தலைவனாகப் பேசப்பெறினும், பிற்காலத்தில் கண்ணன், கிருட்டிணனாகிப் பல வகையில் போற்றப்பட்டுள்ளமை அறிகின்றோம். இராம


  1. The Vedic Age, p. 162