பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வரலாற்றுக்கு முன்


சோழரைக் குறித்ததுபோல, தாலமி பாண்டியர் இருவரெனக் குறிக்கவில்லை. ஆயினும், பாண்டி நாட்டு எல்லை கன்னியாகுமரி தொடங்கி, கொங்கு நாட்டையும், மைசூர் நாட்டு ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டிருந்ததென அசோகர் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றமையின், அப்பரந்த நிலப்பரப்பை இரு வேறு பாண்டியர்கள் ஆண்டார்கள் என்று கொள்வதே பொருத்தமாகும். மதுரையைத் தலைநகர் என யவன ஆசிரியர்கள் குறிக்கின்றார்கள். எனவே, மதுரையைத் தலைநகராகக் கொண்டு, பாண்டி நாட்டுத் தென்பகுதியை ஒரு பாண்டியரும், கொங்குநாட்டையும் அதைச் சார்ந்த பிற பகுதிகளையும் மற்றொரு பாண்டியரும் ஆண்டார்கள் என்று கொள்வது பொருத்தமானதாகும். பின்பு கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வந்த வராகமித்திரர், இருவேறு பாண்டியர் இருந்தனர் எனவும், அவருள் ஒரு சாரார் உருத்திர பாண்டியர்’ எனவும் குறிக்கின்றார்.[1]

கேரள புத்திரரைப் பற்றியும் சத்திய புத்திரரைப் பற்றியும் திட்டமான முடிபுகள் அசோகர் கல்வெட்டு எல்லையில் நின்று காண முடியாவிட்டாலும், தாலமி, பெரிபுளூஸ் போன்ற யவன ஆசிரியர்கள் குறிப்புக்களைக் கொண்டும், பிற சூழல்களாலும் திருவனந்தையைத் தலைநகராகக் கொண்டு திருவாங்கூர்ப் பகுதியை ஆண்டவர்களைச் சத்தியபுத்திரர் என்றும், இக்காலக் கண்ணனூர் (Kranganur) நகரைத் தலைநகராகக் கொண்டு மலபார், கூர்க்கு, தென்கன்னடம் ஆகிய பகுதிகளை ஆண்டவர்களைக் கேரளபுத்திரர் என்றும் கொள்ள வழியுண்டு. இவர்களை வடநாட்டில் ஆண்ட இப்பெயர் கொண்ட சில பரம்பரையோடு சேர்த்தோ, அவர்தம் வழி வந்தவர்கள் என்றோ கூறுவது பொருந்தாது என டாக்டர் பண்டர் கார்


  1. Brlhat . Samhita, XVI : 10.