பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வரலாற்றுக்கு முன்


தென்றும் பண்டர்கார் விளக்கியுள்ளார்கள்[1]. பாபிலோனியாவிலிருந்த மக்களொடு இந்தியமக்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை நாகபுரிப் பொருட்காட்சிச் சாலையில் உள்ள கி.மு. 2000-த்தைச் சேர்ந்த முத்திரை (Seal) நன்கு விளக்குகின்றது என்பர். அது மத்திய இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டதாம். இவற்றால் மிகு பழங்காலத்திலிருந்தே மத்தியதரைக் கடல் நாடுகள். மேற்காசிய நாடுகள் ஆகியவற்றுடன் இந்தியாவின் வடக்கும் தெற்கும் பல்வேறு வகைளில் இணைந்து நின்றன என்பதும், அந்த இணைப்பின் வழிப் பல நாகரிகங்களும் பண்பாடுகளும் கலந்து புதுப்புது மாற்றங்களை வரலாற்றில் உண்டாக்கின என்பதும் தெரிகின்றன. இந்த நிலையிலே தான் அந்தப் பகுதிகளில் வாழ்ந்த அசிரியரும் பின் வந்த ஆரியரும் கடல் வழி தென்கோடியிலுள்ள இலங்கை, தமிழ்நாடு முதலியவற்றிற்குச் சென்றிருக்கக்கூடும் எனக் கொள்வதும் பொருந்துவதன்றோ!

இனி, அசோகர் தம் புத்த மதத்தைத் தம் ஆணையின் கீழ் இல்லாத் தென்னாட்டிலும், இலங்கையிலும் பரப்பினார் என்பது வரலாறு கண்ட உண்மை. அவர் தம் மக்களுள் சிலரையே இங்கு அனுப்பினார் எனக் காண்கின்றோம். தமிழ்நாடு வழியாக அசோகர் அனுப்பிய பெளத்தம் இன்னும் இலங்கையில் வாழ்கின்றது தமிழ்நாட்டில் பல சூழல்களுக்கு இடையில் வரலாற்றில் நின்றுவிட்ட ஒன்றாய் அது அமைந்துவிட்டது. எனினும், ஆட்சியால் அசோகர் காலத்தில் தென்னாட்டுக்கு அவருடைய நேரடித்தொடர்பு இன்றேனும், சமயத்தால் அவர் தென்னாட்டை மட்டுமன்றி, ஈழம், சீனநாடு முதலியவற்றையும் பிணைத்தார் எனக் கொள்ள வேண்டியுள்ளது. மேலை நாட்டில் கிரேக்கரல்லாத பிறரிடம் அக்கிரேக்க நாட்டு ஹெலன் கால நாகரிகம் பரவி நின்றது போன்றே, அசோகர் காலத்துக்கு முன்பே ஆரிய


  1. Asoka. p. 216