பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வரலாற்றுக்கு முன்


நிக்கோலஸ் டமாஸ்கோனஸ்[1] அவ்வாறு அகஸ்தஸிடம் அனுப்பப்பட்ட இந்தியத் தூதுவரைத் தாம் கண்டதாகக் கூறுகின்றார். இந்தக் குறிப்பாளர்க்கு நண்பனாகிய ஏரோது இயேசுவை இன்னலுக்குள்ளாக்கிய ஏரோது மன்னனோ பிறனோ என்பது எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. அகஸ்தஸ் கால எல்லையில் இதற்கு உண்மை காண முடியுமல்லவா? அகஸ்தஸ் அவையில் கி.மு. 22ல் பாண்டி நாட்டுத் தூதன் இருந்தான் என்று அறிதலால் இக்கூற்று உண்மையாகும் அல்லவா?

மற்றொரு யவன வரலாற்றுக் குறிப்பாளரான பிளினி[2] என்பார் யவன நாட்டிலிருந்து இந்தியக் கரைக்கு வரும் கடற்பயணத்தையும் 'தாம்பிரபேன்’ என்று ஈழச் செல்வ வளத்தையும் பிறவற்றையும் குறிக்கின்றார். அலெக்ஸாந்தர் படையெடுப்பை ஒட்டி அவருடன் இந்தியாவுக்கு வந்த அவர் சேனைத் தலைவர் ஒனெசிகிரிட்டோஸ் [3] வடநாட்டு எல்லையில் இருந்தாலும், இந்திய நாட்டு யானைகளினும் இத் தாம்பிரபேன் நாட்டு யானைகள் சிறந்தவை எனக் குறிக்கின்றார். மெகஸ்தனிஸ் குறிப்பும் ஈழம் ஒர் ஆற்றால் (தாம்பபேன்) பிரிக்கப்பட்டது எனவே குறிக்கின்றது. எனவே, இவர்கள் தரை வழித் தாமிர வருணி நதி வரை சென்று, அதன் வெள்ள வேகத்தைக் கடக்க இயலாது அத்துடன் கடல் வந்துவிட்டது எனவும், அதற்கப்பால் உள்ள நிலப்பரப்பே இலங்கை எனக் கொண்டார்கள் எனவும் கருதுவர் சிலர். என்றாலும், இரண்டுக்கும் இட்ையில் ஆழமற்ற நீர்த் தேக்கங்கள் இருந்ததாக அவர்கள் குறிக்கின்றமையின், அக்கூற்று ஆராய்தற்குரியதாகும். எப்படியாயினும், இந்திய வரலாற்றை வடமேற்கு மூலையில் தொடங்கிவைத்த அலெக்சாந்தர் வந்த அந்தநாட்களிலேயே


  1. Nikolaos Damaskonos
  2. Piliny (A.D. 77)
  3. Onesikritos