பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வரலாற்றுக்கு முன்



"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலையிய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் கிலவரை'
(புறம்.72)

எனக்கூறித் தான் புலவர் வாய்ச் சொல்லுக்கு ஏங்கி நிற்கும் நிலையை எடுத்துக் காட்டுகின்றான். அத்தகைய மன்னனைப் பாடவந்த புலவர் மாங்குடிமருதனார் அவனைப் பாடுகின்ற அதே வேளையில் அவனுடைய முன்னோர்களையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றார்; பல்யாகசாலை முதுகுடுமியின் சிறந்து வாழ்க’ என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் போல இனிது உறைமதி' என்றும் அவனை வாழ்த்துகின்றார். புலவர் போற்றும் பண்பாட்டிலும் பிற நல்லியல்புகளிலும் அவர்கள் ஒத்திருந்தார்கள் போலும்! அதனாலேயே அவர்களை எண்ணுகின்றார் புலவர். நெடியோனைக் குறிக்கும்போது,

'தொல்ஆணை நல்லா சிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல
                      (மதுரைக் காஞ்சி. 761-63)

என்றும், முதுகுடுமியைப்

'பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறையோகிய (மதுரை. 759,60)

என்றும் காட்டுகின்றார். சிலர் இருவரையும் பிணைத்து ஒருவரே என்பர். அவர் கூற்றுக்கு ஆதாரமாக முன் கண்ட புறப்பாடலை எடுத்துக் காட்டுவர். ஆனால், நெட்டிமையார் அப் புறப்பாட்டிலே அம்மன்னனை, குடுமி' எனப் பிரித்துப் பின், நெடியோன் பஃறுளி மணலினும் பலவே வாழிய!” என்றே வாழ்த்துகின்றார். எனவே, இருவரும் ஒருவரே அல்லர் என்பது நன்கு தெரிகின்றது.