பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வரலாற்றுக்கு முன்



‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே'
                                    (பதிற். 11: 23-25)

எனக் குமட்டுர்க் கண்ணனாரும் வரைந்துள்ளனர். இவற்றுள் நாம் முன்கண்ட புறநானூற்று ஆறாவது பாடலும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். அதிலும் முதுகுடுமிப் பெருவழுதிக்கு இவ்வெல்லை குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு தமிழ் மன்னர்கள்-மூன்று குலத்திலும் பிறந்த சிறந்த மன்னர்கள் . இமயம் வரை சென்றுள்ளார்கள் எனக் காண்கின்றோம்.

பாண்டியன் நெடுஞ்செழியனும், சோழன் கரிகாற் பெருவளத்தானும், சேரன் இமயவரம்பனும் செங்குட்டுவனும் இமயம் வரை சென்று கயல், புலி, வில் இவற்றைப் பொறித்தார்கள் எனக் காண்கின்றோம். பாண்டியர் இமயம் வரை சென்றதை,

கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல்எழுதிய புலியும் வில்லும்
நாவலம் தண்பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பார்அர சாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன்'
                                (சிலம்பு. 17: 1-5)

என இளங்கோவடிகள் எடுத்துக்காட்டுகின்றார். இனி, அவரே சோழன் கரிகாற்பெருவளத்தான் இமயம் வரையில் சென்றதையும் அவன் பெற்ற வெற்றிச் சிறப்புக்களையும் குறிக்கின்றார்.

“செருவெங் காதலின் திருமா வளவன்
...............................
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு