பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வரலாற்றுக்கு முன்



இவ்வாறு சில ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே வடக்கே உள்ள இமயமும் தெற்கே உள்ள குமரியும் பலப் பல வகைகளில் பின்னிப் பிணைந்து நின்றன. ‘குமரியொடு’ வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்' என்று இளங்கோவடிகள் கூறியபடி இந்த நாடு முழுவதும் திராவிட மொழியும், அதன் அடிப்பட்ட பண்பாடும் நாகரிகமும் பரவி இருந்தன என்பது வரலாறு அறிந்த ஒன்றாகும். இன்றும் கிழக்கே காமரூபமாகிய அசாமிலும், மேற்கே பலுசிஸ்தானத்திலும், மத்திய இந்தியாவில் சூடிய நாகபுரியின் பக்கத்திலும் இத்திராவிட மொழிச் சிதறல்கள் இருப்பதைக் காண்கின்றோம். அக்காலத்தில் இம்மக்களால் அனைத்திந்தியாவிலும் போற்றி வழங்கப்பட்ட பலவகை நல் இயல்புகள் இன்றும் பல்வேறு வகையில் உறழ்ந்தும், பிறழ்ந்தும், மாறியும் வாழ்வதைக் காண்கின்றோம். அன்று தென்கோடியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அன்பாலும், ஆணையாலும், பண்பாலும், பாராட்டாலும் இமயம்வரை தங்கள் கலையையும் நாகரிகத்தையும் வளர்த்து வாழ வைத்தார்கள். அவர்தம் செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும்' நல்ல பண்பினால் மெள்ள மெள்ள வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு வழிவிட்டுத் தெற்கே வந்தனர். தெற்கே அவர்கள் வாழ்ந்திருந்த பெருநிலப் பகுதியை இயற்கை கொண்டு, கடலால் அழிந்தது. இவ்வாறு இரு புறத்தும் இயற்கையாலும் செயற்கையாலும் வாழ்விழந்த தமிழ் மக்கள், இன்றும் வாழிடம் எல்லையில் சுருங்கிய போதிலும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த மனப் பான்மையின் உணர்வையும் உள்ளத்தையும் விரிவாக்கியே வாழ்ந்து வருகின்றார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட அந்த நெடுங்காலத்தில் இவர்கள் எவ்வெவ்வாறு வடநாட்டோடு தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக உணர்ந்து பார்ப்பின் இவர்கள் பெருமை இனிது விளங்கும் என்பது உறுதி.