பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. சிந்து வெளியும் தென்னாடும்



உலக வரலாற்றை ஆராய்கின்ற அறிஞர்கள், தொன்மை காண்பதற்கு எகிப்து, மேசபட்டோமியா போன்ற பகுதிகளையே எடுத்துக் காட்டிய காலம் ஒன்றிருந்தது. இந்திய வரலாற்றை எண்ணுபவருக்கு அலெக்ஸாந்தர் படையெடுப்புத்தான் வரலாற்றுக் கால எல்லையாய் அமைந்தது. அதற்கு அப்பால் சற்று ஆழ்ந்து சிந்திப்போருக்கு இன்னும் ஓர் ஆயிரமாண்டுகளுக்கு முன் வந்த ஆரியரைப் பற்றியும், அவர்கள் சிந்து வெளியில் தங்கிப் பிறகு கங்கைக் கரை வந்து இருக்கு வேதம் செய்த வரலாறு பற்றியும் காண வாய்ப்பு உண்டு. ஆயினும், அவை வரலாற்றில் வைத்து எண்ணத் தக்க முறையில் இல்லை என்றும், அலெக்சாந்தர் படை யெடுப்பே இந்திய வரலாற்றின் எல்லைக்கோடு என்றுமே அறுதியிட்டனர் ஆய்வாளர். அந்த அலெக்சாந்நர் நாட்டிய பன்னிரு வெற்றித் தூண்களைக் காண, வரலாற்றறிஞர் சிந்து வெளியைத் துருவி ஆராய்ந்த போதுதான் அவர் களுக்குச் சிந்து வெளியின் தொன்மையைக் காண வாய்ப்பு உண்டாயிற்று. அங்கே அகழ்ந்து எடுக்கப் பெற்ற பல பகுதிகளில் மோகஞ்சோதாரோ ஆரப்பா போன்ற பல இடங்கள் புதையுண்டு கிடப்பதை அறிந்தார்கள். அவற்றை நன்கு கண்டு ஆராய்ந்த போது அந்த நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதைத் தெள்ளத் தெளியக் கண்டு கொண்டார்கள். எனவே, அன்று தொட்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிலையே மாறுபட்டது. எகிப்து, பாலத்தீனத்தினும் பழமை வாய்ந்தது என்றும்,

வ.—5