பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வரலாற்றுக்கு முன்


அவர் காட்டுகின்றார்; அவ்வாறு வந்தவர்கள் திராவிடருடைய நாகரிகம் பண்பாடு முதலியவற்றைப் பின்பற்றியே வாழ்ந்தார்கள் எனவும் காட்டுகின்றார்.

இச்சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் சேஷ ஐயங்கார் அவர்கள், இது பற்றிப் பலப்பல கொள்கைகளையும் முடிவுகளையும் எடுத்துக் காட்டி, இந்த நாகரிகம் ஆரியருக்கு முற்பட்ட நாகரிகம் எனவும், இது திராவிட நாகரிகமாகவே இருக்கலாம் எனவும் வரையறை செய்கின்றனர்[1]. மற்றும், அவர் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருள்களும் தமிழகத்துத் தென்கோடியில் உள்ள ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும், சித்தூர் பக்கத்தே கண்டெடுக்கப்பட்ட பொருள்களும், பாண்டங்களும் ஒத்திருத்தலைக் காட்டுகின்றார்;[2] அவை மேலை நாட்டுக் கிரீட்டு, பாபிலோனியா நாட்டுப் பண்டைப் புதை பொருள்களை ஒத்துள்ளமையையும் காட்டுகின்றார். எனவே, இச்சிந்து வெளி நாகரிகத்துக்கு முன் பாபிலோனிய எல்லை தொடங்கி, தமிழ் நாட்டுக் குமரி முனை வரையில் இடைப்பட்ட சிந்து வெளி உட்பட, திராவிடர்களே வாழ்ந்தார்கள் என்பதையும் அவர் விளக்குகிறார். அதற்கு ஏற்ற வகையில் பேராசிரியர் ராப்சன்[3] அவர்கள், திராவிடர்கள் வடமேற்குக் கணவாய் வழி வந்தவர்கள் என்பதைக் காட்டி, இன்றும் பலுசிஸ்தானத்தில் திராவிடமொழிக் குடும்பம் வாழ்வதை விளக்கி, சிந்துவெளி நாகரிகம் திராவிடருடைய நாகரிகமே என்பதை நிறுவுகின்றார்.

அண்மையில் இத்துறையில் ஆராய்ச்சி செய்த பிரெஞ்சு ஆசிரியர் திரு. J. பிலியோசட்டு[4] என்பார் தமது புது ஆய்வு நூலில்[5] சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து


  1. Dravidian India, p. 44
  2. Dravidian India, p. 53
  3. prof. Rapsan.
  4. J. Filliozat,
  5. Political History of India.