பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்து வெளியும் தென்னாடும்

89


திருந்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்ற தன்றோ!

நாகர் வழிபாடும் தொன்மை வாய்ந்த ஒன்றாகும். நல்ல பாம்பைப் பற்றிய குறிப்பு வேதத்தில் இல்லை. நாகர் வழிபாடும் ஆரியருக்குத் தெரியாத ஒன்று. ஆனால், தமிழர்கள் மிகுபழங் காலந்தொட்டே நாகர்களை வழிபட்டு வந்தார்கள். இன்றும் தமிழ் நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் நாகர் வழிபாட்டைக் காணலாம். நாகத்தைப் பூசிப்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாகலாம். ஒன்று, அச்சத்தின் வழி நிகழ்ந்திருக்கலாம்; மற்றொன்று, அவை பூமிக்கடியில் இருந்து வருவதால் இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் அந்த உருவத்தில் வெளிவருகின்றனர் என அப்பழங்காலத்தில் நம்பியிருக்கலாம்; தமிழ் நாட்டில் வீடுதோறும் 'மனைப் பாம்பு’ என்று நாகத்தைப் போற்றி வழிபடுவதும், அவற்றைக் கண்டாலும் அவற்றிற்கு ஊறு செய்யாமல் விட்டுவிடுவதும், அவற்றிற்குப் பொங்கல் இட்டுப் பூசை செய்வதும் இன்னும் நாம் காண்பனவே. மற்றும் நாகப் பட்டினம், நாகூர் போன்ற ஊர்களும், நாக நாடு, நாக கன்னிகை போன்றவையும் தமிழர் நாகரோடு கொண்ட தொடர்பினை நன்கு விளக்குவனவாகும்.

நீர் வழிபாடும் நாட்டில்-சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தது எனக் காண்கிறோம்[1]. தமிழ் நாட்டிலும் நீரைத் தெய்வமாக வழிபட்ட வரலாறு பழமையானது. தொல்காப்பியத்தில் நெய்தல் நிலத் தெய்வமாக வருணனை வணங்குவது இந்த அடிப்படையிலேயாம். இன்னும் ஆற்றில் புது வெள்ளம் வரும்போது தமிழ் நாட்டு மக்கள் அதைப் போற்றுவதைக் காண்கின்றோம். ஆரியர் வழக்கத்திலும் வருணன் வழிபாடும் புது வெள்ளம் போற்றலும் உள்ளன என்றாலும், அவர்கள் வருமுன்பே சிந்துவெளி நாகரிக


  1. Indus Civilization, p. 75.