பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. வடமொழி - ஆரியம் -
சமஸ்கிருதம்



ன்று தமிழ்நாட்டில் வடமொழி, ஆரியம், சமஸ்கிருதம் என்ற மூன்றும், தமிழல்லாத—தமிழில் வந்து வழங்கும் ஒரு வேற்று மொழியைக் குறிக்கும் சொற்களாக வழங்கப் பெறுகின்றன. சமஸ்கிருதம் என்பது இந்த நாட்டின் பழங்கால மொழியாக இந்தியா முழுவதும் கொள்ளப்படுகிறது. என்றாலும் அம்மொழியும் அம்மொழிக் குரிய மக்களும் பரந்த இந்தியநாட்டு எல்லைக்கு வெளியே இருந்து உள்ளே வந்தவர்கள் என்றும், அக்காலம் இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்றும் வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர். அவர்தம் மொழிக்கு அவ்வாறு வந்த அக்காலத்தில் தமிழிலோ பிற இந்திய மொழிகளிலோ என்ன பெயர் இட்டனர் என்பது திட்டமாகக் கூற இயலவில்லை.

ஒரு நாள் என் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் வழியில் வரும்போது இம்மூன்று சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா எனக்கேட்டார். அப்போதுதான் அவை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு தோன்றிற்று, ஆய்ந்து பார்ப்பின், இம்மூன்றும் மூன்று வகையில் பொருள் தரத்தக்கன என்றும், சமஸ்கிருதம் என்ற மொழியைப் பிற இரண்டும் குறிப்பன அல்ல என்றும் எண்ணவேண்டி வரும். இக் கருத்தை மக்கள் முன் வைக்கின்றேன்; அறிஞர்கள் முடிவு கூறட்டும்.

வடசொல் என்பது தொல்காப்பியத்திலே கூறப்படுகிறது. எச்ச இயலில் சொற்களைப் பாகுபடுத்தும் ஆசிரியர்