பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வரலாற்றுக்கு முன்


தெலுங்குமொழி பேசியவரையே, தமிழர், ‘வடுகர்’ என அழைத்து வந்தனர். “வடுகன் தமிழறியான் வைக்கோலைக் கசுவென்பான்’ என்ற ஒரு வேடிக்கைப் பழமொழி நாட்டில் வழங்குகின்றது. அவ்வடுகர் வேங்கடத்துக்கு அடுத்த ஆந்திர நாட்டில் வாழ்ந்தவர்களாவார்கள். தமிழ்நாட்டு வட எல்லையில் வாழ்ந்தவரை வடுகர் என்றும், மொழியை வடமொழி என்றும் தமிழர் அழைத்திருக்க வேண்டும். தொல்காப்பியர் காலத்திலேயும் வடவேங்கடம் வடக்கு எல்லையாய் இருந்தமையின் அவர் கூறும் வடமொழியும் இவ்வடுகர் பேசிய மொழியைத்தான் குறிக்கும் என்பது கொள்ளத்தக்கதாகும். தமக்கு அடுத்து அண்மையில் இருக்கும் மொழிபற்றியும் அது தமிழில் வந்து வழங்கும் வழக்குப் பற்றியும் ஒன்றும் கூறாது, எங்கோ ஆயிரம் கல்லுக்கு அப்பாலுள்ள மொழி வழங்குவதுபற்றி இலக்கணம் கூறினார் என்றால் பொருந்தாது. உரையாசிரியர்களெல்லாம் அவர் காலத்தில் சமஸ்கிருதம் தமிழில் வழங்கியதறிந்தும் காலச் சூழலுக்கு உட்பட்டும் அவ்வாறு உரை எழுதினார்கள் என்று கொள்ளுவதே பொருத்தமான தாகும். மற்றும் தமிழில் வடுக மொழியாகிய தெலுங்கு மொழிச் சொற்கள் அதிகமாகப் பயின்று வந்தமையாலும், திராவிட மொழிக் குடும்பத்துள்ளே தமிழொடு அதிகத் தொடர்பு கொண்டமையானும் வடசொல்’ என்றும் பிற சொற்களினின்றும் அதைத் தனியாகப் பிரித்துக் கூற வேண்டியதாயிற்று.

நிற்க, வடமொழி சமஸ்கிருதத்தைத்தான் குறிப்பதாயின், அது வழங்கிய நாடு மிக வடக்கே இருந்தது. அந்த ஆர்யவர்தத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் ஆயிரம் கல் தூரத்துக்குமேல் உள்ளது. இரண்டுக்கும் இடையில் தெலுங்கு போன்ற பல மொழிகள் வழக்கில் உள்ளன. அவை எல்லாம் சமஸ்கிருதத்தை எப்பெயரால் அழைத்தன? ‘வடமொழி’ என்று ஒவ்வொன்றும் அதைக் கூறியிருக்கிறதா? இல்லை என்பர் மொழி ஆராய்ச்சியாளர். எனவே