பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடுத்து வைக்காதவர் 125

கிடைக்கவில்லை. அந்த ஸார் தமது பாலிசியை பெருமையாக விவரித்தார் - 'நான் பேப்பர் திருத்துகிற விதமே தனி. விடைத் தாள்களின் கட்டை எடுப்பேன். முதலில் இருக்கிற தாளுக்கு பாஸ் மார்க் கொடுப்பேன்'. அடுத்ததுக்குப் பெயில் மார்க் தான். இப்படி மாறி மாறிக் கொடுப்பேன். நமசிவாயம் பேப்பர் பெயில் மார்க் பெற வேண்டிய இடத்தில் இருந்திருக்கிறது! அது தான் விஷயம்’ என்றார். இந்த லெட்சணத்தில் தான் இருக்கும் ஒவ்வொருவர் பாலிசியும்!' என்று நமசிவாயம் கூறுவார்.

'பார்க்கப் போனால், கடவுள்கூட அந்த வாத்தியார் மாதிரிதான் நடந்து வருகிறார். நல்லவங்க, திறமை உள்ளவங்க, தகுதி உடையவங்க கஷ்டப்படுகிறாங்க. வாழ்க்கை வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதேயில்லை. ஆனால், ஏமாற்றுகிறவர்கள், அயோக்கியர்கள், மனச்சாட்சி இல்லாதவங்க சகல வசதிகளையும் பெற முடிகிறது. இதெல்லாம் கடவுள் சித்தம் என்றால், கடவுளும் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்க்கையை மதிப்பிட்டு 'மார்க்குக் கொடுக்கிறார்' என்று தானே சொல்லவேண்டும்?' இப்படியும் பேசுவார் நமசிவாயம்.

மனிதரின், உயிர்க்குலத்தின், உலகத்தின் வளர்ச்சி வீழ்ச்சிகளைப் பாதிக்கிற காலத்தைக் கண்காணிக்கும் உபாத்தியாயர் என்று உருவகப்படுத்தினால், அந்த 'வாத்தியார்' திருவாளர் நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைத் தாளில் தாறுமாறான மதிப்பு எண்களையே சிதறி வைத்தார் என்று சொல்ல வேண்டும்.

நமசிவாயத்துக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன்னரே அவருடைய தந்தை காலமாகிவிட்டார். நமசிவாயம் பிழைப்புக்காக என்னென்னவோ வேலைகள் பார்த்து, எங்கெங்கோ திரிந்து, எப்படியோ ஒரு தினுசாக நாளோட்டி வந்தார். அவருடைய ஊர் பெரியவர் ஒருவர், அவர் மீது அனுதாபம் கொண்டோ, அல்லது பெண்ணைப் பெற்று வளர்த்துப் பெரியவளாக்கிய பிறகு எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்துத் தங்கள் பொறுப்பைக் கழித்துவிடப் பெரிதம் முயன்றும் வெற்றி பெறாது தவித்த பெற்றோர் தந்த கமிஷனைப் பெற்றுக் கொண்டோ, லட்சுமி என்கிற பெண்ணை நமசிவாயத்துக்கு வாழ்க்கைத் துணைவி ஆக்கினார்.

இல்லற வாழ்வின் இனிமைகளை முழுமையாக அனுபவிக்கவும் நமசிவாயத்துக்குக் கொடுத்து வைக்கவில்லை! லட்சுமி கொடிய நோயினால் பீடிக்கப்பட்டாள். அந்த எலும்புருக்கி நோய்க்கே பலியானாள்.