பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புன்சிரிப்பு 11

என்ன செய்வது? போய்த்தானே தீரவேண்டும் என்று முணுமுணுத்துக் கொண்டார் அவர்.

பஸ் வந்தது, அவசரம் அவசரமாகப் பிரயாணிகள் ஏறி இடம் பிடித்தார்கள். அவர்கள் பொறுமையை மேலும் சிறிது நேரம் சோதித்த பிறகு பஸ் சாவதானமாகக் கிளம்பியது. ஒடியது. ராமலிங்கம் அடிக்கடி கைக் கடியாரத்தைப் பார்த்துப் பார்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்.

'எக்ஸ்பிரசை பிடிக்கும்படியா இது போய் சேருமோ என்னமோ!' என்ற உதைப்பு அவர் மனசை அலைக் கழித்தது. 'உம்ம். எல்லாம் அவள் அருள். நடக்கிறபடி நடக்கட்டும்’ என்றும் மனம் குறுகுறுத்தது.

இடை வழியில் ஒரு பெரும் சோதனையாக லெவல் கிராஸிங் கேட் அடைக்கப்பட்டு விட்டது. எப்பவோ வரவிருந்த ஏதோ ஒரு டிரெயினுக்காக முன்கூட்டியே கதவை அடைத்து விட்டார்கள். வழக்கமான இச்செயலினால் பாதிக்கப்படுகிற பஸ் பயணிகள் வழக்கமாகப் புலம்புகிற குறை கூறல்களை இந்த பஸ்ஸின் பயணிகளும் புலம்பினார்கள். ராமலிங்கத்தின் மனமும் ஒத்துப் பாடியது.

‘வெகுநேரம்' எனத் தோன்றிய ஒரு கால அளவுக்குப் பிறகு - ரயில்வண்டி கடந்து போன பின்னர் - கேட் திறக்கப்பட்டது. வண்டிகள், பஸ்கள், லாரிகள் மற்றும் பலவகை வாகனங்களும் ஏற்படுத்திய நெரிசலில், பஸ் மிக மெதுவாகத்தான் முன்னேற முடிந்தது.

ராமலிங்கம் ஜங்ஷன் ஸ்டேஷனை அடைந்த போது, எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்று ஐந்து நிமிஷங்கள் ஆகியிருந்தன.

ஏமாற்றம் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. என்ன செய்வது இனி என்ன செய்யலாம் என்று குழம்பியபடி நின்றார் அவர்.

'ஸார் வாறேளா? ஒரே ஒரு ஸீட் இருக்கு. அருமையான வண்டி. நல்ல பிளஷர் கார் ரயில் கட்டணத்துக்கு மேலே ஒரு ரூபா கொடுத்தால் போதும் ஜம்னு உட்கார்ந்து, எக்ஸ்பிரஸை விட வேகமாப் போயி சீக்கிரமே நகர் சேர்ந்திடலாம்!"

அவர் அருகில் வந்து இதைச் சொன்னவனின் குரல் அவரது ஆசையை தூண்டியது. சிறிது தயங்கினார். பிறகு துணிந்து விட்டார். அந்த ஆள் காட்டிய காரில் ஏறி அமர்ந்தார்.